பாகிஸ்தான் அரசு தன் நாட்டின் பழமையை பாதுகாக்கும் வகையில் தன் நாட்டின் பல்வேறு நகரங்களின் பெயரை மாற்றி வருகிறது. அதன் அடிப்படையில் பிரிவினைக்கு முந்தைய தங்களின் பழைய இந்து, சீக்கிய, சமண மற்றும் காலனித்துவக் கால பெயர்களை மீட்டுருவாக்கம் செய்துவருகிறது. தற்போது, அங்குள்ள அதிகாரப்பூர்வ பெயர் பலகைகளில் 'இஸ்லாம்புரா' என்பதை 'கிருஷ்ணா நகர்' என்றும், 'பாப்ரி மஸ்ஜித் சௌக்' என்பது மீண்டும் 'ஜெய்ன் மந்திர் சௌக்' என்றும், 'ரஹ்மான் கலி' என்பது 'ராம் கலி' என்றும் மாற்றப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் குறைந்தது ஒன்பது இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் பல இடங்கள் தங்களின் பழைய பெயருக்குத் திரும்பத் தயாராக உள்ளன.
சுன்னத் நகர் - சாந்த் நகர், மௌலானா ஜாபர் அலி கான் - சௌக்லட்சுமி சௌக், முஸ்தபாபாத் - தர்மபுரா , சர் ஆகா கான் சௌக் - டேவிஸ் ரோடு , அல்லாமா இக்பால் ரோடு - ஜெயில் ரோடு, பாத்திமா ஜின்னா ரோடு - குவீன்ஸ் ரோடு, பாக்-இ-ஜின்னா - லாரன்ஸ் கார்டன்ஸ், இஸ்லாம்புரா - கிருஷ்ணா நகர், ஹமீத் நிஜாமி ரோடு - டெம்பிள் ஸ்ட்ரீட், நிஷ்தர் ரோடு - பிராண்ட்ரெத் ரோடு (Brandreth Road), ரஹ்மான் கலி - ராம் கலி, பாப்ரி மஸ்ஜித் சௌக் - ஜெயின் மந்திர் ரோடு, காசியாபாத் - கும்ஹார்புரா, ஜிலானி ரோடு - அவுட்ஃபால் ரோடு, ஷாஹ்ரா-இ-அப்துல் ஹமீத் பின் படீஸ் - எம்பிரஸ் ரோடு (Empress Road) என மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தப் பெயர் மாற்றும் பிரசாரம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு மேற்கொண்டு வரும் 'லாகூர் பாரம்பரியப் பகுதி புத்துயிரூட்டல்' (LHAR) என்ற ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். பல கால அலட்சியம், திட்டமிடப்படாத நகரமயமாக்கல் போன்ற செயல்பாடுகளால் லாகூரின் கட்டடக்கலை மற்றும் கலாச்சார கட்டமைப்பு சிதைந்தது. எனவே, அதை மீட்டெடுக்கும் வகையில், பாகிஸ்தானின் கலாச்சாரத் தலைநகரான லாகூரை, பிரிவினைக்கு முந்தைய பாரம்பரியத்திற்கு மீட்டெடுக்க பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் 50 பில்லியனில் திட்டம் வகுத்தார். அந்த திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் பெயர்மாற்றம்.

நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகளும், தற்போதைய பஞ்சாப் மாகாண முதலமைச்சருமான மரியம் நவாஸ் ஆகியோரால் 2025-ம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளைப் போல பாகிஸ்தானும் தனது நகரங்களின் வரலாற்று பாரம்பரியத்தை அழிப்பதற்குப் பதிலாக அதைப் பாதுகாக்க வேண்டும் என முடிவு செய்தது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் அரசுக்கு வருவாயை ஈட்டுவது எனவும் கூறப்படுகிறது.
from India News https://ift.tt/Y706cxE
0 Comments