மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு எம்.ஜி.ஆர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் ஹசர்நிஷா(44). இவருக்கு ஒரு மகளும் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை விட்டு பிரிந்த இவர் தன் தாய் வீட்டில் மயிலாடுதுறையிலே இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
மேலும் வறுமையின் காரணமாக குழந்தைகளை தன் தாயிடம் விட்டுவிட்டு ஓமன் நாட்டிற்கு பல வருடங்களுக்கு முன் வேலைக்கு சென்றதாகவும், பாஸ்போர்ட் விசா போன்ற உரிய ஆவணங்கள் இன்மையால், இந்தியா திரும்ப இயலா நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுக்குறித்து நம்மிடையே பேசிய இவரின் மகன் மாலிக் பாட்ஷா, ``என்னுடைய அம்மா எனக்கு ஐந்து, ஆறு வயது இருக்கும்போதே பாட்டியிடம் எங்களை விட்டுவிட்டு ஓமன் நாட்டிற்கு வேலைக்கு போயிவிட்டார. வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அவரின் பாஸ்போர்ட், விசா ஆகியவை எரிந்து விட்டது. அதன் பின்னரும் வறுமையின் காரணமாக அங்கேயே கிடைக்கும் வேலைகளை செய்து வாழ்ந்துள்ளார். மேலும் என் சகோதரியின் திருமணம், தாத்தாவின் இறப்பு, கணவரின் இறப்பு என எதற்கும் வர இயலவில்லை.

சகோதரியின் திருமணத்திற்கு வரவேண்டும் என நாங்கள் அனைவரையும் போனில் பேசி அழுத நிலையில் கூட அவர் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் போனை ஸ்சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகாலமாக பணம் அனுப்புவதும் இல்லை. இதற்கிடையில் சென்ற ஆண்டு நானும் ஓமன் நாட்டிற்கு சென்று அம்மாவை பார்த்த பொழுதுதான் பாஸ்போர்ட் விசா எரிந்தது பற்றியும், அதனால் இந்தியா திரும்ப முடியவில்லை எனவும் தெரியவந்தது.
ஓமன் அயலக தூதரகத்தில் மனுக்கொடுத்த போது இந்திய நாட்டினை சேர்ந்தவர் என்பதற்கான ஆவணம் ஏதேனும் அளிக்கும் பட்சத்தில் இந்தியா திரும்ப வழிகை செய்யப்படும் என்று கூறினர்.
அம்மா அப்பொழுது ரேஷன் கார்டை ஆதாரமாக வைத்தே வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், இன்று அந்த பழைய ரேஷன் கார்டுகள் இல்லை. ஓமனில் இருந்து இந்தியா திரும்பிய நான் என்ன செய்வதென்று தெரியாமல் உடனே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடமும், பாராளுமன்ற உறுப்பினர் சுதா அவர்களிடமும் மனுக்கொடுத்தேன். ஆனால், மனுக்கொடுத்து ஆறு மாதங்களை ஆன நிலையிலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வயதான பாட்டி, அக்கா, சித்தி என அனைவரும் அம்மாவை பார்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக ஏக்கத்தில் வாடுகின்றனர். அம்மாவும் வெளிநாட்டில் மிகுந்த சிரமத்திற்கிடையிலேயே வாழ்ந்து வருகிறார். வெளிநாட்டில் தவிக்கும் அம்மா சீக்கிரம் இந்தியா திரும்ப அரசு வழிவகை செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து வெளிநாட்டில் உள்ள ஹசர்நிசாவிடம் பேசியபோது, ``நான் 2007இல் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு வந்தேன். 2011-இல் நான் வீட்டில் வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட விபத்தில் என்னுடைய பாஸ்போர்ட் விசா எரிந்துவிட்டது.
அப்பொழுதே அங்குள்ள எம்பசியில் மனு கொடுத்ததேன். ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்பும் வெளிநாட்டிலேயே வேலை செய்துக்கொண்டிருந்தேன் .

இப்பொழுது மகன், மகள் என அனைவரும் வளர்ந்துவிட்ட நிலையில் இந்தியா திரும்ப முயற்சி செய்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைகள் அவ்வளவாக கிடைப்பதும் இல்லை. அனைவரும் வேலை கொடுக்கவும் பயப்படுகின்றனர். பாஸ்போர்ட், விசா, இன்றி இருப்பதால் மருத்துமனைக்கு செல்ல, மருந்துகள் வாங்க, என அனைத்திற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறேன்.
வயசான அம்மா, என்னுடைய மகள், அவளின் மகள் என அனைவரையும் பார்க்க வேண்டும். இனி வரும் காலத்தில்லாவது அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஒரே ஆசை. நான் இந்தியா திரும்பி என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ அரசு எனக்கு உதவ வேண்டும்" என கண்ணீர் மல்க கூறினார்.
அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.!
from India News https://ift.tt/gaXlyq9
0 Comments