வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தனது இடைக்கால அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணன், `காவல்துறையின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாக' அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்திவந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மர்ம நபர்கள் மனித மலத்தைக் கலந்த கொடிய சம்பவம் அரங்கேறியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்த கொடுஞ்செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப்போட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமைத் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த வெள்ளனூர் காவல்துறையினர் சரிவர விசாரணை மேற்கொள்ளவில்லை என்ற புகார் எழும்ப, வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து பல மாதங்களாகியும் உண்மையானக் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் முயற்சியில் அதிகாரிகளும், காவல்துறையினரும் செயல்பட்டுவருவதாக சம்மந்தப்பட்ட வேங்கைவயல் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
அந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த ராஜ்கமல் என்பவர், ``வேங்கைவயல் வழக்கில் புதுக்கோட்டை சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ளாமல் வெறும் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்துகிறார்கள். அவர்களுக்கு உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தும் எண்ணம் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக புகாரளித்து 90 நாள்கள் கடந்த நிலையிலும், வழக்கு தொடா்பாக ஒருவரைக்கூட கைது செய்யவில்லை. முறையாக விசாரிக்கப்படாத இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்!" எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ``வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து, இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!" என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அதன்பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு நபர் ஆணையத் தலைவர் முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணன் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வேங்கைவயல் விவகாரம் தொடர்பான சத்தியநாராயணன் ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கையை சீலிடப்பட்ட உறையில்வைத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பின்னர் நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ``வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இதுவரை 191 சாட்சிகளிடம் காவல்துறை விசாரணை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே சந்தேகத்துக்குரி நபர்கள் 25 பேரிடம் மரபணு பரிசோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் 4 பேரிடம் இன்னும் இரண்டு வாரங்களில் சோதனை நடத்தி முடிக்கப்படும்!" எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணனின் இடைக்கால அறிக்கையில், `காவல்துறை விசாரணை மிகவும் மந்தநிலையில் நடக்கிறது' என குற்றம்சாட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், `வேங்கைவயல் இடைக்கால அறிக்கையை பாதுகாப்பாக வைக்கவும்' எனக்கூறி சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் கையளித்தனர்.
மேலும், `வேங்கைவயல் விவகாரம் தொடர்பான இந்த வழக்கின் சிபிசிஐடி விசாரணையில் உள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யவேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கின்றனர்.
`தமிழ்நாடு அரசு தரப்பு சார்பில் சிபிசிஐடி விசாரணை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகுதான், வழக்கின் அடுத்தகட்ட நிலையை உறுதிப்படுத்த முடியும்; கடந்த ஆண்டு இறுதியில் நடந்த இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் ஒருவரைக்கூட, இதுநாள் வரை கண்டுபிடித்து கைதுசெய்யமுடியாமல் கிட்டதட்ட 10 மாதங்களாக கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. சிபிசிஐடியும் கண்டுபிடிக்காத நிலையில், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு பரிந்துரைக்கவும் முகாந்திரம் இருக்கிறது' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/I0nJZua
0 Comments