``சகோதரத்துவம் போற்றும் சகலகலா வல்லவன்" - கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க, ம.நீ.ம.வைச் சோ்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனர். தி.மு.க சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அ.தி.மு.க சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருமாவளவன் - கமல்ஹாசன்
திருமாவளவன் - கமல்ஹாசன்

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தேர்வானதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல்.திருமாவளவன், கமல் ஹாசனை சந்தித்தார். அது தொடர்பாக தன் முகநூல் பக்கத்தில், ``ஒருமணிநேரம். கரைந்ததே தெரியவில்லை. கட்சி அரசியல் கலப்பில்லாத கருத்துப்பொழிவு. ஒரு சொல்லும் வீண் இல்லை. சாதியே எதிரி. சாதியைக் காக்கும் சனாதனக் கருத்தியலே பகை. அதனை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல்.

தேர்தல் களத்தில் வெல்வது வெற்றியுமல்ல ; தோற்பது தோல்வியுமல்ல! திராவிடம் தென்னாட்டுக்கு மட்டுமோ; ஓரிரு கட்சிகளுக்கு மட்டுமோ உரியதல்ல; அது தேசம் தழுவியது. அயோத்திதாசப் பண்டிதர் முன்மொழிந்தது. நாளும் பொழுதும் இடையறாது நாட்டை உலுக்கும் மூன்று பரிசுத்த ஆவிகள். அவை, உடுக்கை அடித்து எவராலும் குடுவைக்குள் அடைக்கமுடியாத அறிவுப்பிசாசுகள்.

திருமாவளவன் - கமல்ஹாசன்
திருமாவளவன் - கமல்ஹாசன்

காந்தி, அம்பேத்கர், நேரு ஆகிய அம்மூவரும் தான் பழமைவாதம் தகர்க்கும் கருத்தியல் பேரிடிகள். புதுமை இந்தியாவைப் படைக்கும் ஞானச்சிற்பிகள். அவர்களைச் சிதைக்க முனைவது சிறுபிள்ளை விளையாட்டு! இன்று அரசமைப்புச் சட்டம்தான் நாம் ஏந்த வேண்டிய ஓராயுதம்; பேராயுதம்! இப்படி நீண்டது...அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் கருத்தாடல். தெளிந்த பார்வை! தேர்ந்த இலக்கு! சிலிர்ப்பைத் தந்தது! சிலாகிக்க வைத்தது!

யாவற்றுக்கும் மேலாக...

"ஆடைகொண்டு போர்த்த வேண்டாம்; உடலைக் கொண்டு போர்த்துங்கள்"என்று சொல்லிக்கொண்டே என்னை ஆரத்தழுவி அணைத்துக்கொண்ட அவரின் பெருமூச்சில் அன்பின் கதகதப்பை உணர முடிந்தது. உள்ளம் முழுதாய் உறைந்து நின்றது. இடைவெளி இல்லாது இறுக அணைப்பதில் தானே சகோதரத்துவம் துளிர்விடும்! சகோதரத்துவம் போற்றும் சகலகலாவல்லவன் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்."



from India News https://ift.tt/FMCmT3q

Post a Comment

0 Comments