``தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட தரமாட்டார்கள்" - அமித் ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி!

மத்தியில் ஆளும் பா.ஜ.க 2014 முதல் தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளை நிறைவுசெய்து 10 ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதன் ஒருபகுதியாக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகிறது பா.ஜ.க. அதன் ஒருபகுதியாக, சென்னை மற்றும் வேலூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க-வின் சாதனை விளக்க கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதில், பா.ஜ.க என்ன சாதனை செய்தது என்ற முதல்வர் ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி ஆட்சியில் 12,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், 2024-ல் பாஜக தமிழ்நாட்டில் 25 இடங்களை வெல்லும் என்றும் கூறினார். மேலும், பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது என்றும் அமித் ஷா கூறியிருந்தார்.

அமித் ஷா

இந்த நிலையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, `ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை என அமித் ஷா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்' என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ``தமிழ்நாடு, பா.ஜ.க. ஆட்சியில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அக்மார்க் உண்மை என்பதை அமித் ஷாவே புரிந்து கொண்டு, திசை திருப்பி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார். சாதனைமிக்க சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட இந்த ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள நிதி ஒதுக்கீடுகள், மானியங்கள், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய அரசியல் சட்டக் கடமை.

அது பா.ஜ.க.ஆட்சியில் இருப்பதால் வந்தது இல்லை. எந்த அரசு ஒன்றியத்தில் இருந்தாலும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி மூலம் தமிழ்நாட்டிலிருந்து அதிக வருவாய் ஒன்றியத்திற்குக் கிடைக்கும்போது கூட தமிழ்நாட்டை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அதற்குப் பதில், தமிழ்நாட்டில் வசூலித்து உ.பி.யிலும்- பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை முன்பு முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் அழுத்தத்துக்கு பயந்து மாற்றி, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்ததுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு.

டி.ஆர்.பாலு

ஒன்றிய வரி வருவாய்க்கு தமிழ்நாடு அளிப்பது 1.6 லட்சம் கோடி ரூபாய். ஆனால் அந்த ஒன்றிய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளிப்பது வெறும் 41 ஆயிரம் கோடி ரூபாய். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒன்றிய வரி வருவாய்க்கு 100 ரூபாய் தமிழ்நாடு கொடுத்தால், பா.ஜ.க. ஆட்சி தமிழ்நாட்டிற்கு 20 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறது. இதை விட மோசமாக நிதி ஒதுக்குவோம் எதிர்காலத்தில் என இப்போது வேலூரில் 25 எம்.பி. தொகுதி கொடுங்கள் எனக் கேட்கிறாரா உள்துறை அமைச்சர்? தமிழ்நாட்டுக்கு கடந்த 9 வருடத்தில் இரண்டு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் அளித்ததாகக் கூறும் போது, அதே காலகட்டத்தில் உத்தரப்பிரதேசத்துக்கு 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை அள்ளித் தந்ததை ஏன் மறைக்க வேண்டும்? பேரறிஞர் அண்ணாவின் மொழியில் சொன்னால் `வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்ந்து கொண்டே போகிறது'.

2015-ல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டாத ஆட்சி. இதுவரை அதற்கு நிதி கூட ஒதுக்காமல் அநீதி இழைக்கும் ஆட்சி. சென்னை மெட்ரோ ரயில்-II திட்டத்திற்கு 2019-இல் நிதி கேட்டும் இன்று வரை ஒப்புதல் வழங்காத ஆட்சி. 2023-2024 பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2.5 விழுக்காடு. கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ரயில் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 18 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் 2023-24 ஒரு நிதியாண்டில் மட்டும் உத்தரப்பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி 17,500 கோடி ரூபாய். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதே பா.ஜ.க. ஆட்சியில்தான். சி.ஆர்.பி.எப் தேர்வைத் தமிழில் எழுத உத்தரவிட்டது பற்றி சிலாகித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறார்.

அமித் ஷா, மோடி

ஆனால் வங்கி, ரயில்வே, ராணுவம், அஞ்சல் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை ஒன்றிய அரசு இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் நடத்துகிறது. தமிழில் இல்லை. உள்துறை அமைச்சர் இதை மறுக்க முடியுமா? தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களை இந்திமயமாக்கி, அங்கு தமிழ்நாட்டு இளைஞர்களே வேலைக்குச் செல்ல முடியாத நிலையை உருவாக்கியுள்ளது பா.ஜ.க. ஆட்சிதான் என்பதை உள்துறை அமைச்சர் மறுக்க முடியுமா?

மேலும், நீட் கொண்டு வந்து தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது, ஒரு பயோமெட்ரிக் கேமிரா வேலை செய்யவில்லை என்பதற்காக ஸ்டான்லி உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழ்நாட்டை அவமானப்படுத்தியது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது என அடுக்கிக் கொண்டே போகலாம். மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீடு செய்ய மாட்டார்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் கூட தமிழ்நாட்டிலிருந்து சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளை நியமனம் செய்ய மாட்டார்கள். ஆனால் தமிழ் மீது பாசம் இருப்பது போல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற வேஷம் போடுவது எந்த ஆட்சி? அது சாட்சாத் பா.ஜ.க ஆட்சிதான். உள்துறை அமைச்சரே, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, நீதிமன்றங்கள் ஆகியவற்றை உங்கள் கோரப்பிடியில் இருந்து விடுவியுங்கள்.

டி.ஆர்.பாலு

ஊழலே செய்யாத ஆட்சியில் ஏன் அதானி பற்றி நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு பயப்பட வேண்டும்? ஊழலே இல்லை என்றால் ஏன் ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திலேயே நாட்டின் ரகசியம் என வாதிட வேண்டும்? நாட்டு மக்கள் குஜராத் கலவரத்தையும் - அந்த வழக்குகள் எப்படி நீர்த்துப் போக வைக்கப்பட்டன என்பதையும் - சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு நீதிபதிக்கு என்ன ஆனது என்பதையும் இன்னும் மறந்து விடவில்லை என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனவே, மூழ்கும் கப்பலாக இருக்கும் பா.ஜ.க இன்னும் எத்தனைக் கற்பனை கதைகள், ஏவல் படைகளுடன் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட கொடுக்க மாட்டார்கள் என்று அமித் ஷாவுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று டி.ஆர்.பாலு குறிப்பிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/N7LYzoF

Post a Comment

0 Comments