கேரள மாநிலம் காசர்கோட் அருகே உள்ள செருவத்தூரில் 16 வயது மாணவி ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்தார் என்கிற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. ஷவர்மா ஆபத்தான உணவா என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தன. ஷவர்மாவின் வரலாறு என்னவென்று பார்ப்போம்
ஷவர்மா, லெவாண்டின் எனச் சொல்லப்படுகிற மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியிருக்கும் நாடுகளின் உணவு முறையில் அங்கம் வகிக்கிற ஒன்று. துருக்கி, பாலஸ்தீனம், லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமான உணவு ஆரம்பத்தில் வேறுமாதிரி தயாரிக்கப்பட்டது.
இப்போது தயாரிக்கப்படுவதுபோல நெட்டுவாக்கான கம்பியில் இறைச்சியைச் சுற்றி வேக வைக்கும் முறை முன்பு கிடையாது. கிடைமட்ட கம்பியில் கீழே இருந்து தீ வர இறைச்சி வேகவைக்கப்படும். இந்த முறையில் இறைச்சிக்கு சுவை கொடுக்கும் கொழுப்பு தீயில் உருகி வீணாவதும் அதனால் நெருப்பின் வெப்பம் அதிகரித்து இறைச்சியின் மேற்பகுதி அளவுக்கு அதிகமாக வெந்துவிடுவதும் உட்பகுதி வேகாமல் இருக்கிற பிரச்சனைகளும் இருந்தன. இவற்றை தவிர்க்கும் விதமாக இன்றைக்கு ஷவர்மா உருவாக்கும் முறையை 18-ம் நூற்றாண்டில் ஸ்கெந்தர் இபென்டி என்பவர் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. இவரது பெயரில் ஸ்கெந்தர் கெபாப் இன்றைக்கும் துருக்கியில் பிரபலமான உணவு.
ஷவர்மாவின் உலகப் பயணம்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு துருக்கியில் இருந்து மக்கள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். அப்போது கையோடு ஷவர்மாவின் ரெஸிபியையும் எடுத்துச் செல்கிறார்கள். 1980-களில் ஜெர்மனி, அமெரிக்கா நாடுகளில் ஷவர்மா பிரபலமான உணவாகிறது. இந்தியாவில் சிக்கன்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டாலும் மட்டன், இளங்கன்று, வான்கோழி போன்ற இறைச்சி வகைகளிலும் இது தயாரிக்கப்படுகிறது.
ஷவர்மா ஆபத்தான உணவா?
ஷவர்மா அதிக கலோரிகள் கொண்ட உணவு. 400 முதல் 500 கலோரிகள் வரை ஒரு சாதாரண ஷவர்மாவில் கிடைக்கும். இதனை செலவிட 4 முதல் 5 மணிநேரம் நடக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது போக இதில் மினர்ல, விட்டமின் போன்ற சத்துக்களைக் காட்டிலும் அதிகளவில் இருப்பது கார்போஹைட்ரேட் தான். இது உடல்நலனுக்கு ஏற்றதல்ல எனினும் எப்போதாவது ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவரை வழங்குகிறார்கள் மருத்துவர்கள்.
ஷவர்மா தயாரிக்கும் முறை
அடுப்பில் நீளவாக்கில் சுற்றிக் கொண்டிருக்கும் இறைச்சி குத்தப்பட்டிருக்கும் கம்பியில் இருந்து 120 டிகிரி அளவுக்கு தடிமனான இறைச்சித் துண்டுகள் வெட்டப்படுகின்றன. இந்தத் துண்டுகளை பிட் பிரட் அல்லது பிளாட் பிரட் என சொல்லப்படுகிற குபூஸ் போன்ற ரொட்டியில் மயோனைஸ் தடவி, உட்புறமாக பொதிந்து ரோல் போல சுற்றப்பட்டு தரப்படுகிறது. இந்த இறைச்சி Marinating என சொல்லப்படும் முறைக்கு பிறகே அடுப்பில் ஏற்றப்படும். அரேபியன் மசாலா, லெமன், யோகர்ட் போன்றவை இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும்.

எங்கு பிரச்சனை?
இந்த ஷவர்மா ஏன் தீங்கு விளைவிப்பதாக மாறுகிறது என்றால் இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்ற இறைச்சி சரியான தட்பவெட்பத்தில் பராமரிக்கப்படாமல் இருந்தாலோ அல்லது நாள்பட்ட இறைச்சியாக இருந்தாலோ ஆபத்து என்கிறார்கள். அதனால் புட் பாய்சன் ஏற்பட்டு உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் உடல் பலவீனமானவர்களுக்கும் இந்த உணவு ஏற்றதல்ல.
கேரளா சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சாவூர் ஒரத்தநாட்டிலும் மூன்று மாணவர்கள் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதியானார்கள். கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிலோ கணக்கில் கெட்டு போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க தறிக்கும் பொருட்கள் சுத்தமானவையா என்பதை உணவகங்களும் அரசும் உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் மக்களும் தாங்கள் உண்ணும் துரித உண்வுகள்மீது கவனத்தோடு இருக்கவேண்டும். இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து அதனைத் தவிர்க்கவும் குறைவாக உட்கொள்ளவும் முயற்சிக்கலாம் என்பதே நிபுணர்களின் அறிவுரையாக இருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/1rdVpRE
0 Comments