பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ம.க-வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``சென்னையை சேர்ந்த ஒரு முக்கியத் தலைவர், மே மாதம் 4-ம் தேதிதான் தமிழ்நாட்டிற்கு உண்மையான விடுதலை கிடைத்த நாள் எனக் கூறினார். கடந்த 60 ஆண்டு காலமாக இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த நிலையை மாற்றி, மக்கள் ஒரு பெரிய புரட்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்திய நாளாக இந்த மே 4-ம் தேதியை அவர் பார்க்கிறார். பா.ம.க-வின் அறிக்கைகளையும் திட்டங்களையும் உன்னிப்பாகக் கவனித்து, மற்ற தலைவர்கள் அதிலிருந்து 'கட் பேஸ்ட்' செய்து அறிக்கையாக வெளியிடுகிறார்கள்.

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள், பயமின்றி மக்களின் பிரச்னைகளை நடுநிலையோடு வெளியிட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத ஒரு சுதந்திரமான சூழல் தற்போது நிலவுகிறது. ஊடகங்கள் தைரியமாகச் செயல்படுகின்றன.
இத்தகைய கருத்துக்களைக் கூறுவதால் ஆளுங்கட்சியுடன் கூட்டணி அல்லது நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாகப் பொருளாகாது. கடந்த கால ஆட்சியாளர்கள் நம் ஆலோசனைகளைக் கேட்காமல் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் செயல்பட்டனர். ஆனால் தற்போதைய அரசு நாம் சொல்லும் மக்கள் நலத் திட்டங்களைக் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது." என்றார்.
அதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், ``கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வரும் வேளையில், தமிழ்நாடு அரசு இதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரையும், நீர்வளத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து அரசியல் ரீதியான அழுத்தங்களை உருவாக்க வேண்டும். பல்வேறு சட்டப் போராட்டங்களையும், வழக்குகளையும் தொடுக்க வேண்டும். டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு, 2028 கர்நாடக சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அங்குள்ள நிலைப்பாட்டையே ஆதரிக்கும் என்பதால், நாம் இன்னும் விழிப்புடனும் அவசரத்துடனும் செயல்பட வேண்டும்.
ஊடகவியலாளர் விஜயன் காவல் துறை விசாரணைக்கு ஆஜரானது குறித்த முழு விவரங்கள் தெரியாமல் கருத்து கூற இயலாது. பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ அருள் ஒரு வருடத்திற்கு முன்பே கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். பா.ம.க-வின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பொறுப்புகள் வழங்குவது போன்றவை கட்சியின் உள்விவகாரம்." என்றார்.
from India News https://ift.tt/a68CzWv
0 Comments