மகனுக்காக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க நிதின் கட்கரி முயற்சி? 4 யூடியூப்பர்கள் மீது வழக்கு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாகனங்களில் எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். பெட்ரோல் மற்றும் டீசலுடன் எத்தனாலை குறிப்பிட்ட அளவு கலந்துப் பயன்படுத்தலாம் என்று கூறி வருகிறார்.

ஆனால் நிதின் கட்கரி தனது சுயலாபத்திற்காகத்தான் இது போன்று எத்தனால் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது மகன்கள் எத்தனால் தொழிலில் ஈடுபட்டு இருப்பதால் எத்தனால் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் இக்குற்றச்சாட்டை நிதின் கட்கரி மறுத்துள்ளார். எத்தனால் கலப்பு திட்டத்தை முன்னெடுத்ததில் தமக்கு தனிப்பட்ட ஆதாயம் மற்றும் நலன்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த வித உண்மையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மனீஷ்
மனீஷ்

இது தொடர்பாக நிதின் கட்கரி அளித்த பேட்டியில், ''வாகனங்களால் ஏற்படும் மாசைக் குறைக்கவும், நாட்டின் இறக்குமதிச் செலவை மிச்சப்படுத்தவும்தான் எப்போதும் மாற்று எரிபொருட்களையே ஆதரித்து வருகிறேன். இது போன்ற குற்றச்சாட்டுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

எனது மகன்களின் வணிகத்தில் எத்தனாலின் பங்கு மிகச் சிறியது. மொத்த விநியோகத்தில் அவர்களின் பங்களிப்பு மிகக் குறைவு. மேலும், அந்த வணிகத்தில் அவர்களுக்கு 1,600 கோடி ரூபாய் கடன் இருக்கிறது.

அதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. விலை நிர்ணயம் அல்லது கொள்முதலில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்த எத்தனால் கலப்பு திட்டம் வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதே தொடங்கப்பட்டது. அதற்கு அதன் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கூட்டணி அரசும் ஆதரவு கொடுத்தது.

மேலும், அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் நாடாளுமன்றத்தில் இத்திட்டத்தை ஆதரித்துப் பேசினார். கரும்பிலிருந்து பெறப்படும் எத்தனாலை மட்டுமன்றி, மக்காச்சோளம், பயிர் வைக்கோல் (stubble) மற்றும் மூங்கில் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலையும் நான் ஆதரித்து வருகிறேன்'' என்றார்.

மேலும், மெத்தனால், ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மாற்று எரிபொருட்களையும் தாம் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் சமூக ஊடகங்களில் பரவும் புகார்கள் ஆதாரமற்றவை என்றும், ஒரு பெரிய தவறான தகவலைத் திட்டமிட்டு பிரசாரம் செய்வதாகக் குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது எரிபொருள் திறன் சற்று பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், வாகனங்களின் எஞ்சின் சேதமடையும் என்ற புகார்களை நிதின் கட்கரி நிராகரித்தார்.

இதற்கிடையே எத்தனால் பயன்பாடு விவகாரத்தில் நிதின் கட்கரி மீது அவதூறு பரப்பியதாக பீகாரைச் சேர்ந்த யூடியூப்பர் மனீஷ் காஸ்யப் உட்பட 4 பேர் மீது நாக்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நான்கு சமூக ஊடக பிரபலங்களும் எத்தனால் பயன்பாட்டில் பெரிய அளவிலான மோசடிகளும் போலியான பரிவர்த்தனைகளும் நடைபெற்று வருவதாகக் கூறி, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிரபலமான சமூக ஊடக தளங்களில் வீடியோக்களை வெளியிட்டனர்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

இந்த வீடியோக்கள் மூலம், எத்தனால் கொள்கையில் சட்டம் மீறப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். தங்கள் வீடியோக்களில் கட்கரியின் எத்தனால் தொடர்பான கொள்கைகளை அவர்கள் வேண்டுமென்றே தவறாகச் சித்தரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து பா.ஜ.க சமூக ஊடக பிரிவு கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



from India News https://ift.tt/y6ivc2H

Post a Comment

0 Comments