Millet didis: கவனம் ஈர்த்த தினை; ஜி-20 மாநாட்டில் அனுபவம் பகிரும் ஒடிசா பழங்குடியின பெண்களின் கதை!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சரியான தளமாக ஜி-20 மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசாங்கம் 2023-ஐ சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கக்கோரி, ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்மொழிந்தது. இதனால் இந்தியா தினை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. எனவே, ஒடிசாவின் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த சுபாசா மோஹந்தா (Subasa Mohanta) மற்றும் ரைமதி கியூரியா (Raimati Ghiuria) என்ற இரண்டு பழங்குடியின பெண்கள் உலகத் தலைவர்களுக்குத் தினை விவசாயத்தின் நன்மைகள் மற்றும் வெற்றிக் கதையை சொல்வதற்காக G-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் அழைப்பைப் பெற்றுள்ளார்கள்.

ஜி 20 உச்சி மாநாடு

தினை விவசாய நுட்பங்களை ஊக்குவிப்பதில் இரண்டு பழங்குடி பெண் விவசாயிகளும் ஈடுபட்டிருக்கின்றனர். ஒடிசா மாநில மில்லட் மிஷனின் கீழ் 30 மாவட்டங்களில் 177 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் இரு பெண்களும் இணைந்துள்ளனர். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம், ஜாஷிபூர் தொகுதியில் உள்ள கோய்லி கிராமத்தில் வசிக்கும் 'மாண்டியா திதி' என அறியப்படும் சுபாசா மொஹந்தாவின் வெற்றிக் கதை ஜி 20 மாநாட்டில் அரங்கேற இருக்கிறது. அவரது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தினை விவசாயத்தில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனாலும், சுபாசா மொஹந்தா ஒடிசா மாநில அரசின் ஒடிசா மில்லட் மிஷனின் ஆதரவுடன் 2018-ம் ஆண்டில் பழைமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தினை சாகுபடியைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக, அவர் ஒரு வெற்றிகரமான விவசாயியாக உருவெடுத்தது மட்டுமல்லாமல், தினை சாகுபடியின் மூலம் தனது சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவியிருக்கிறார். அவர் குறிப்பாகப் பழங்குடியினப் பெண்களைத்  தினை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டு முதல் தினை பயிரிட்டு வரும் மொஹந்தா, தன்னுடைய மருமகன் தனக்கு 250 கிராம் தினை விதைகளை கொடுத்தபோது பயிரை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். இது குறித்து அவர், ``நான் வெள்ளரி, பூசணி மற்றும் பிற காய்கறிகளைப் பயிரிட்டேன். ஆனால் எனக்கு நல்ல லாபம் கிடைக்கவில்லை. அதனால் தினை சாகுபடியை மேற்கொண்டேன். தற்போது என்னுடைய பொருளாதார நிலை மேம்பட்டிருக்கிறது.தினை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய மாநில அரசுக்கு நான் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன்'' என்றார்.

பழங்குடியின பெண்கள்

இவர் தன்னுடைய பங்களிப்புகளுக்காக மாநில மற்றும் தேசிய அளவில் விருது பெற்றிருக்கிறார். ஒடிசா மில்லட் மிஷன் பற்றி G20 உச்சிமாநாட்டில் பகிர்ந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. மார்ச் மாதம் 2023-ல் நடந்த தினை பற்றிய உலகளாவிய மாநாட்டிலும் பங்கேற்றார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோருடன் உரையாடினார்.

ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டம், குந்த்ரா தொகுதி, நுவாகுடா கிராமத்தில் வசிப்பவர் ரைமதி கியூரியா. இவர் 124 உள்ளூர் தானிய வகைகள் அழிந்து போகாமல் பாதுகாத்து புகழ் பெற்றவர். இதில் 72 நாட்டு நெல் ரகங்களும், ஆறு வகையான தினைகளும் அடங்கும். தினை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் தனது பழங்குடி சமூகத்திற்குச் சிறந்த வாழ்வாதாரத்தை ஈட்ட உதவினார். இது குறித்து அவர், ``ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தினை விவசாயம் மற்றும் அதன் பலன்கள் பற்றி அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/Mkv4ew0

Post a Comment

0 Comments