டிடிவி தினகரன் `திவாலானவர்’... அமலாக்கத்துறை வழக்கும் பின்னணியும்!

வெளிநாட்டில் இருந்து  62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக  கடந்த 1995-96 காலகட்டத்தில் பெற்றதாகவும், பின்னர்  அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும், அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்.பி டிடிவி.தினகரன்  மீது  அமலாக்கத்துறையினர், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 1998-ம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையம்,` 31 கோடி ரூபாய் அபராதத்தை, 28 கோடி ரூபாயாக குறைத்து’ உத்தரவிட்டது.

டிடிவி தினகரன்

இந்த அபராதத்தை செலுத்தாததால் டிடிவி தினகரனுக்கு எதிராக அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி, அதனை ரத்து செய்து  கடந்த 2003-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005-ல்  தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் ஆகஸ்ட் 21-ல் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஃபெரா சட்டத்தின் கீழ்  தினகரனுக்கு விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில்,  பல ஆண்டுகளாக அதை செலுத்தாமல் காலதாமதம் செய்து வருவதால், அவரை திவாலானவர் என அறிவிக்கக் கோருவதில் சட்டப்படி எந்த தடையும் இல்லை என விளக்கமளித்தார்.

‘20 ரூபாய் என்னாச்சு கேளுங்கள்’- டிடிவி தினகரனை தெறிக்கவிட்ட குடிமகன்!

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார்,  ``திவாலானவர் என அறிவிக்க அது உரிமையியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதால்,  அபராதத்தை செலுத்தவில்லை என்பதற்காக திவாலானவர் என அறிவிக்கும்படி கோர முடியாது”, என வாதிட்டார். வாதங்கள் முடிவடையாததால், வழக்கின் விசாரணையை  செப்டம்பர் 4-ம் தேதிக்கு  நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இந்த தீர்ப்பையொட்டி பல்வேறு சந்தேகங்களும் விவாதங்களும் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக வழக்கறிஞர் சக்திவேலிடம் பேசினோம். "இந்த வழக்கில் டிடிவி தரப்பு வாதம் என்னவென்றால் உரிமையியல் நீதிமன்றம் அபராதம் விதித்து, அதை கட்டாவிட்டால் தான் ஒருவரை திவாலானவராக அறிவிக்க முடியும். அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையம் விதிக்கும் அபராதத்தை கட்டாதவருக்கு இது பொருந்தாது என்பதுதான்.

அதே நேரம், அமலாக்கத்துறை தனது அபராதத் தொகையை வசூலிக்க உரிமையியல் நீதிமன்றத்தை தான் நாட வேண்டுமா?  மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் விதித்த அபராத தொகையை கட்டாத காரணத்தாலேயே ஒருவரை திவாலானவர் என அறிவிக்கலாமா?  என்பது தான் இந்த வழக்கின் முக்கியமான கேள்வி. இந்த கேள்விக்கான விடை தான் இந்த மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பாக வரும்.  

டிடிவி தினகரன்

சட்ட நுணுக்கமாக பார்த்தால் திவால் என்பது தீர்ப்பின் மூலம் பெறக்கூடிய கடன் என வரையறுக்கப்படுகிறது. திவால் சட்டத்தில் இதற்கான பெரிய விளக்கங்கள் இதுவரை வந்ததில்லை. ஒரு வேளை இந்த வழக்கின் தீர்ப்பில் அது வரலாம். மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் அபராதம் விதித்தாலும் அதை கட்டாவிட்டால் அவரை திவாலானவராக அறிவிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம். அப்படி அளித்தால்,  டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி அறிவித்தால் அவரது அனைத்து சொத்துக்களும் நீதிமன்றம் நியமிக்கக் கூடிய வழக்கறிஞரின் பார்வைக்கு வந்துவிடும். தினகரன் தேர்தலில் போட்டியிடுவதிலும் சிக்கல் வரும்.

அல்லது உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வந்தால், அமலாக்கத்துறை தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்படும். அதே வேளையில், ஃபெரா சட்டப்படி அபராதத்தை வசூலிக்கும் உரிமை அமலாக்கத்துறைக்கு உள்ளது. மனு தள்ளுபடியானாலும் அவர்கள் நேரடியாக வசூலிப்பார்கள். அல்லது உரிமையியல் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றால் வழக்கு தொடுப்பார்கள்" என்றார்.



from India News https://ift.tt/Dv2oAx9

Post a Comment

0 Comments