அமைச்சர் செந்தில் பாலாஜிமீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை, பா.ஜ.க-வின் பழிவாங்கல் நடவடிக்கை என தி.மு.க தரப்பிலிருந்து விமர்சனங்களும், கண்டனங்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு பா.ஜ.க-வை விமர்சித்து, எச்சரித்து வீடியோ வெளியிட்டார்.
அதில், ``பா.ஜ.க-வின் பாணி, ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வெவ்வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள். ஆனால் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் ரெய்டு நடக்காது. ஏனென்றால், அங்கு ஆட்சியில் இருப்பது உத்தம புத்திரன் பா.ஜ.க. ரெய்டுகளுக்குள்ளானவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்த பின்னர் புனிதர்களாகிவிடுகிறார்கள். எங்களை மிரட்டிப் பணியவைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.
தி.மு.க-வைச் சீண்டிப் பார்க்காதீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை" எனப் பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்விதமாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தொட்டுப் பார். சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வதற்காக, ஒரு சாதாரண மேடைப் பேச்சாளர் பேசும் தொனி. ஆனால், ஸ்டாலின் அவர்களே... நீங்கள் இப்படிப் பேசுவது, நீங்கள் வகிக்கும் முதலமைச்சர் என்ற பதவிக்கு உகந்ததா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க, பலமுறை எதிர்க்கட்சி வரிசையிலும், சில முறை ஆளுங்கட்சியாகவும் சட்டமன்றத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. சட்டத் திட்டங்கள், விசாரணை நடைமுறைகள் அனைத்தும் தெரிந்த, ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சட்டமன்ற அனுபவமிக்க நீங்கள், ஐந்து கட்சிகள் மாறிவந்த ஒருவரைக் காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்டப் பேச்சாளர்போல பேசுவது முறையா?
தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நடந்த போதுகூட வாய் திறக்காத நீங்கள், கரூரில் 26/05/2023 அன்று சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டபோது, கண்டனம்கூடத் தெரிவிக்காத நீங்கள், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டவருக்காக இப்படிப் பொங்குவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா... உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். 2016 -ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18-ம் நாள், குளித்தலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நீங்கள் குற்றம்சாட்டிய, நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஏழு வருடங்களில் என்ன மாறிவிட்டது... நீங்கள் கோரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதை உங்கள் கட்சி சார்பாக வரவேற்றல்லவா இருக்க வேண்டும்?
சி.பி.ஐ விசாரணைக்கு முன், மாநில அரசின் அனுமதி வேண்டும் என்று அவசர அவசரமாக முடிவெடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கடந்த பல ஆண்டுகளில், அதாவது, மத்தியில் பா.ஜ.க ஆட்சியிலுள்ள போதே எத்தனை முறை சி.பி.ஐ விசாரணை கோரியிருக்கிறீர்கள் என்பது நினைவிருக்கிறதா?
2014-ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை முகலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததற்கு, சி.பி.ஐ விசாரணை கோரினீர்கள். 2015 பிப்ரவரியில் வி.வி மினரல்ஸ் நிறுவனத்தின் மேல் சி.பி.ஐ விசாரணை கேட்டீர்கள். 2016 மே அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களில், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றீர்கள். அரவக்குறிச்சியில் இதே செந்தில் பாலாஜி அவர்களின்மீதுதான் குற்றச்சாட்டும் வைத்தீர்கள். 2017 டிசம்பரில், முன்னாள் முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்மீது சி.பி.ஐ விசாரணை கோரினீர்கள். 2018 ஏப்ரலில், குட்கா விற்பனை தொடர்பாக சி.பி.ஐ விசாரண கோரினீர்கள்.
2018-ல் குரூப் 1 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரிக்கை முன்வைத்தீர்கள். 2018 ஜூலையில், அன்றைய அமைச்சர்கள் மேல் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும், கனிம மணல் சுரங்கம் குறித்தும் சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை வைத்தீர்கள்.
2018 ஆகஸ்ட், தமிழக மின்சார வாரியம் நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரிக்கக் கோரிக்கை வைத்தீர்கள். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை கேட்டீர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்தும் சி.பி.ஐ விசாரணை தேவை என்றீர்கள்.
2018 செப்டம்பரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஏலம் குறித்தும், 2019 மார்ச்சில் பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் குறித்தும், 2019 ஜூனில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் சி.பி.ஐ விசாரணை கோரினீர்கள்.
அதேபோல 2019 செப்டம்பரில் ஆர்.கே.நகர்த் தேர்தல் முறைகேடுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரிக்கை வைத்தீர்கள். அதே ஆண்டு ஆக்டோபர் மாதம், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்குக் கோரிக்கை வைத்தீர்கள்.
2020 ஜூனில் தூத்துக்குடி லாக்கப் மரணங்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை கேட்போம் என்ற அறிவித்தீர்கள். அதே ஆண்டு செப்டம்பரில் பிரதமரின், விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், தமிழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றீர்கள்.
நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எத்தனை சி.பி.ஐ விசாரணை கோரிக்கைகள்? நீங்கள் இப்போது ஆளுங்கட்சியான பின்பு, சி.பி.ஐ உங்கள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே வரவேண்டும் என்று சொல்வது நீங்கள் நடத்தி வரும் ஆட்சியின் அவலங்களின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
அது மட்டுமல்ல உங்கள் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது, உங்களுக்கான தனிப்பட்ட தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பை நம்பாமல், மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பைக் கேட்ட வரலாறும் உண்டு. தற்போது என்ன மாறிவிட்டது என்று நினைக்கிறீர்கள்... யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசமான வார்த்தைகள்... உங்கள் கட்சித் தொண்டர்களை எவ்வாறு வழி நடத்துகிறீர்கள்? இது போன்று பேசுவது, தனிச்சிறப்பு வாய்ந்த, பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட நமது மாநிலத்துக்கு உகந்தது கிடையாது.
நீங்கள் எட்டரை கோடி தமிழ் மக்களுக்கான முதல்வரா அல்லது உங்கள் குடும்பத்துக்கும் உங்களைச் சுற்றியிருக்கும் குறுகிய வட்டத்துக்குமான முதல்வரா என்பதை நீங்கள் முடிவுசெய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சி.பி.ஐ விசாரணை கோரும்போது, நீங்கள் செய்த தவற்றுக்கு நாங்கள் சி.பி.ஐ விசாரணை கோருவதில் என்ன குற்றம் கண்டீர்கள்... எதற்காக இப்படிப் பதறிப் பாய்கிறீர்கள் முதல்வர் அவர்களே?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
from India News https://ift.tt/SKu6zlt
0 Comments