தமிழ்நாட்டில் பாரம்பர்யமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ``ஜல்லிக்கட்டு தொடர்பாகத் தமிழக அரசு சமர்ப்பித்திருக்கும் ஆவணங்கள் திருப்திகரமாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாசாரமாக இருந்தாலும் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் ” எனத் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான, நமது பிரதமர் மோடிக்குத் தமிழக பா.ஜ.க சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது. ஜூலை 11, 2011 அன்று, காங்கிரஸ், தி.மு.க கூட்டணி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் 2014-ம் ஆண்டு மே மாதம், உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு மீதான தடையை உறுதி செய்தபோது, ஜெய்ராம் ரமேஷ் அந்தத் தீர்ப்பை வரவேற்று, "காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது" என்று கூறினார்.
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், முன்னாள் பிரதமரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களைக் கைவிடுவது நன்று என்று மனிதநேய சங்கம் ஒன்றின் கடிதத்திற்குப் பதிலளித்தார். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
இருப்பினும், அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் மத்திய அரசு உத்தரவுக்குத் தடை விதித்ததும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. 2016-ம் ஆண்டு மே மாதம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு முழுவதுமாக தடை செய்யப்படும் என்று கூறியிருந்தது.
தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பர்யத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்று தி.மு.க-வுடன் இணைந்து மக்களை மடைமாற்றி வருகின்றனர். 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் அம்சங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தத் தருணத்தில், ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி மனுத் தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌமியா ரெட்டியும் ஒருவர் என்பதையும், சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக, கர்நாடக மாநிலத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பிரசாரம் செய்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியாலும் அதன் கூட்டணிக் கட்சிகளாலும் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் அது பிரதமர் மோடி மட்டும் தான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/rMnfSke
0 Comments