பிரபல தேர்தல் யுக்தி வகுப்பாளரான பிரசாத் கிஷோர் கர்நாடக தேர்தல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், மக்களவைத் தேர்தலில் என்ன காத்திருக்கிறது... சட்டமன்ற தேர்தல் முடிவை தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருக்க, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்க விரும்புகிறேன். 2013-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. 2012-ல் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கலாம்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றியது. 2018 சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இந்த மாநிலங்களில் சில மாதங்களுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத் தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றிகரமான பிரசாரத்திற்கு வியூக நிபுணராக பணியாற்றியபோது பிரசாத் கிஷோர் முக்கியத்துவம் பெற்றார். பின்னர் 2014 தேசிய தேர்தலில் மோடியின் வெற்றிகரமான பிரதமருக்கான முயற்சியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அதன் பின்னர் நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலின், ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி என பலதரப்பட்ட தலைவர்களின் தேர்தல் பிரசாரங்களை பிரசாந்த் கிஷோர் கையாண்டுள்ளார். 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எந்த கட்சிக்கும் பணியாற்றப் போவதில்லை என்று கூறிய பிரசாந்த் கிஷோர் 'ஜன் சுராஜ்' என்கிர பெயரில் பீகாரில் பாதை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
பிரஷாந்த் கிஷோர் கருத்து தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், “2019-ல் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. இந்த முறை எதிர்கட்சிகளின் ஒற்றுமை கொஞ்சம் சீரிசாக ஒர்க்கவுட் ஆகும் போல் தெரிகிறது. மம்தா, அகிலேஷ் போன்றோர் ஓரளவுக்கு காங்கிரஸுடன் ஒரு புரிதல் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. கடுமையான எதிர்ப்பில் இருந்த கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் போன்றோர் அதானி பிரச்னைக்கு பிறகு ஒன்றாக சேர்ந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் கர்நாடகவில் காங்கிரஸ் வென்ற பின் மற்ற எதிர்க்கட்சிகள் ஒரு இணக்கமான சூழல் வந்திருப்பது போல் தெரிகிறது.
2018-ல் ராஜஸ்தான், சட்டிஷ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் கூட நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றார்கள் என்பது உண்மைதான். என்னதான் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, விலைவாசி உயர்வு என்று அரசுக்கு எதிரான மக்களின் மன நிலை இருந்தாலும், மோடியின் இமேஜ், இந்துத்துவா பிரசாரம், கம்யூனல் டிவைட் போன்ற விஷயங்கள் மூலம் அந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது பாஜக. அதோடு, 2019 பிப்பரவரில் புல்வாமா தாக்குதல் குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியதை இங்கு நினைவு கூறுகிறேன். அதன் பின் தேச ஒற்றுமை, தேச பாதுகாப்பு, மோடியால்தான் நாட்டை பாதுகாக்க முடியும் என பிரசாரம் மாறியது.
ஆனால் 2019 தேர்தலிலேயே எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஏனென்றால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 284 தொகுதிகள் வென்ற பாஜக அதன் பின் நடந்த 12 இடைத்தேர்தல்களில் தோல்வியை தழுவியது. இதை எதிர்கட்சிகள் பயன்படுத்தவில்லை. இன்றைய சூழலில் நாடு முழுவதும் மோடிக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது உண்மைதான். அதே நேரத்தில் அந்த செல்வாக்கு கர்நாடக தேர்தலில் அடிப்பட்டு போனது என்பதையும் மறுக்க முடியாது.
மோடிக்கான செல்வாக்கு இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் அவரையும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பாஜக-வின் பலம் எலெக்ஷன் மிஷினரி. அதோடு அதிகார பலம்.அதை வைத்து பாஜக எப்படி ஸ்டேட்டர்ஜிக்கலாக கொண்டு போவார்கள் என்பதும் தெரியாது. எனவே வரப்போகும் 2024 தேர்தல் என்பது எது போன்று சூழ்நிலை நிலவும் என்று சொல்லிவிட முடியாது. எது எப்படி இருந்தாலும், பி.கே சொல்வதை எச்சரிக்கையாக எடுத்து கொண்டு எதிர்கட்சிகள் செயல்பட வேண்டும்” என்றார்.
from India News https://ift.tt/oaU4swt
0 Comments