தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று ஆளும் தி.மு.க கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், 12 மணிநேர வேலை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றன. அதோடு மசோதா குறித்து ஏப்ரல் 24-ம் தேதியன்று தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், 12 மணிநேர வேலை மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியிருக்கிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள, 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதை எதிர்த்து பல்வேறு நாடுகளிலும் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஏராளமானோரின் உயிர்த் தியாகங்களுக்குப் பிறகு 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமை கிடைத்தது. 1945-ல் இந்தியத் தொழிலாளர்களுக்குச் சட்டபூர்வமாக 8 மணி நேர வேலை உரிமையை டாக்டர் அம்பேத்கர் பெற்றுத் தந்தார். தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
ஆனால், தற்போதைய தமிழக அரசு, எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் நலனுக்காக, தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுவரக் கருதி இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் இருக்கிறது. ஏற்கெனவே தனி மனித மகிழ்ச்சிக்கான அளவீட்டில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பின்தங்கியுள்ள நிலையில், 12 மணி நேரம் இயந்திரம்போல உழைப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.
நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்தில், தொழிலாளர்களின் பணி நேரம் குறைய வேண்டுமே தவிர, அதிகரிக்கக் கூடாது. அதுவே மானுடம் வளர்ந்ததற்கான அடையாளம். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு முதலாளிகளுக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/r6lenSd
0 Comments