அண்ணாமலை திட்டமும், எதிர்ப்புக்குக் காரணமாகும் `அமைச்சர் கனவும்’ - டெல்லி ஆதரவு யாருக்கு?!

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 17-ம் தேதி சென்னை அமைந்தகரையிலுள்ள அய்யாவு மண்டபத்தில் நடைபெற்றது. கமலாலயத்திலுள்ள கூட்ட அரங்கில் புனரமைப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்ததால் இடமாற்றம் செய்யப்பட்டு, நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், ``தமிழக பாஜக-வை இதுவரை இல்லாத அளவுக்கு வளர்த்தெடுப்பது என்பதுதான் எனது திட்டம். அதற்காகத்தான் நான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அதற்கு எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் `நான் தேசியக் கட்சியின் மேனேஜர் இல்லை, ஒரு தலைவர்’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தேன். தமிழ்நாட்டில் பாஜக-வை வளர்ப்பதற்கு, வெற்றிபெறுவதற்கு உரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. ஒருவேளை தேசியத் தலைமை அதிமுக-வுடன் கூட்டணிவைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி, ஒரு தொண்டனாகவே இருந்துவிட்டுப் போய்விடுவேன். தொடர்ந்து அதிமுக நம்மைவிட்டு விலக வேண்டும் என்று செயலாற்றிவரும் நிலையில், நாம் மட்டும் ஏன் அவர்களுக்கு அடிபணிந்து போக வேண்டும்?” என்று அண்ணாமலை பேசிய விஷயத்தை முதன்முதலாக நம் ஜூ.வி இணையத்தில் வெளியிட்டோம்.

இந்தச் செய்தி பரவிய அடுத்தடுத்த மணி நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் மட்டுமல்ல, பா.ஜ.க-விலும் இது பேசுபொருளாக மாறியது. இதுவரை கட்சிக்குள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்திய பாஜக சீனியர்கள், வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். அண்ணாமலையை விமர்சிக்கவும் தொடங்கினர்.

பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்

மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “இரண்டு வருடங்கள் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்த பிறகு, தமிழக அரசியலில் இரண்டு ஆண்டுகளாக உற்று நோக்கிய பிறகு, நான் உறுதியாக நம்புகிறேன்... மிகப்பெரிய மாற்றத்துக்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். நான் ஏற்கெனவே சொன்னதுபோல இந்தக் கட்சியுடன் கூட்டணி... அந்தக் கட்சியுடன் கூட்டணி என்று பேசுகிற அதிகாரம் எனக்கு இல்லை. அதற்கான நேரம் விரைவில் வரும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். இரண்டு வருடங்கள் அரசியலைப் பார்த்த பிறகு இந்த முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். அதை என்னுடைய கட்சிக்குள் நான் பேச ஆரம்பித்திருக்கிறேன்.

கூட்டணியைப் பற்றி அதற்கான நேரம் வரும்போது எங்களுடைய தலைவர்கள் சொல்வார்கள். நான் வேலையை விட்டுவிட்டு, மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் என்று வந்திருக்கிறேன். தவறுகள் செய்வதற்கு நான் தயாராக இல்லை. அந்த அடிப்படையில் சில வார்த்தைகளை நான் அன்று பேசியிருந்தேன். நானும் என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி மாற்றிக்கொண்டுதான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட அரசியல் எனக்குத் தேவையில்லை என்கிற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம்… “கூட்டணி குறித்து அண்ணாமலை மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது தவறு. அது கட்சியின் மையக் குழுவில் பேசி முடிவெடுக்கவேண்டிய விஷயம். ஏற்கெனவே அ.தி.மு.க., பா.ஜ.க இடையிலான உரசல்கள் அதிகரிப்பதை அறிந்த தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, கிருஷ்ணகிரிக்கு வந்தபோது, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நல்ல முறையில் தொடர்வதற்கு நாம் உதவிசெய்ய வேண்டும். எல்லோரிடமும் பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்ளுங்கள்’ என அறிவுறித்திச் சென்றார். ஆனால், அவர் சொல்லிவிட்டுச் சென்ற சில நாள்களிலேயே எதை மனதில்வைத்து அண்ணாமலை பேசிவருகிறார் என்பது தெரியவில்லை.

அண்ணாமலை

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. ‘மோடி 3.O’–வில் கிட்டத்தட்ட 400-எம்.பி-களுக்கு மேல் பா.ஜ.க டார்கெட் செய்கிறது. தனிபெரும்பான்மையோடு இருக்கும்போது பல சட்ட திட்டங்களைக் கொண்டுவருவதற்கும் தயாராகிவருகிறது. எனவே, ஒவ்வொரு மாநிலத்தையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்றாற்போல் திட்டம் தீட்டிவருகிறார் அமித் ஷா. அதன் அடிப்படையில்தான் ஜே.பி.நட்டா மூலமாக தமிழக பா.ஜ.க-வுக்கு அறிவுரையும் வழங்கினார். இதையெல்லாம் அறிந்த அண்ணாமலை தொடர்ந்து கூட்டணிக் கட்சியினருடன் முரண்பட்டு நிற்பது, தமிழக பா.ஜ.க-வுக்கு ஆரோக்கியமான விஷயமில்லை” என்றவர், இதுவரை கட்சிக்குள் இருந்த சீனியர்களுக்கும், அண்ணாமலைக்குமான மோதல் வெளிபடையாக வந்ததற்கான காரணங்களை எடுத்துச் சொன்னார்.

“2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக-வோடு கூட்டணி அமைத்து தமிழக பாஜக எம்.பி-க்களைப் பெற்றுவிட்டால் அதில் மத்திய அமைச்சராக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு அதிமுக கூட்டணியோடுதான் 2024 மக்களவைத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதைத்தான் தேசியத் தலைமையும் கணக்கு போடுகிறது. ஆனால், அண்ணாமலையோ, மக்களவைத் தேர்தலைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. தனது நடைப்பயணத்தில் கூட சட்டமன்றத் தேர்தலை தான் பிரதானமாக முன்னிறுத்த வேண்டும் என்று கருதுகிறார். அண்ணாமலையின் இந்தப் போக்கு தமிழகத்தில் பாஜக-வினர் மத்திய அமைச்சர்களாக ஆகும் வாய்ப்பைத் தடுத்து நிறுத்துவதாக இருக்கிறது என்று சீனியர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் அவர் தேசியத் தலைமை விடுத்த அறிவுரையையும் மீறி, தனது தனிப்பட்ட எண்ணத்தை முன்னிறுத்தும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்திவருகிறார் என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்” என்றார்.

‘அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்ற பேச்சுகளும் எழ, ஏன் தொடர்ந்து அவரது பேச்சுகள் விமர்சனத்துக்குள்ளாகின்றன?’ என்பது குறித்து அவரை நன்கு அறிந்தவர்களிடம் விசாரித்தோம். அவர்களோ, “இப்படிப் பரப்பினால் அண்ணாமலையையும் பா.ஜ.க-வையும் பலவீனப்படுத்த முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க-வில் நீண்ட பயணத்துக்குத்தான் கட்சியில் இணைந்திருக்கிறார் அண்ணாமலை. அதனால் தனிக்கட்சி ஆரம்பிக்கிறார் என்று சொல்வதெல்லாம் அபத்தம். தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளும், காசு கொடுத்து வாக்கு பெறும் அரசியலை முன்னெடுக்கிறார்கள். அது வேண்டாம் என்று நினைக்கிறார். தமிழ்நாட்டில் தனித்து நிற்கலாம் என்று அவர் சொன்ன பிறகு புதிய புதிய நபர்கள் இது பற்றிப் பேசுகிறார்கள். ஆதரிக்கிறார்கள்.

அண்ணாமலை, ஜே.பி.நட்டா, வானதி சீனிவாசன், எல்.முருகன்

அ.தி.மு.க உட்கட்சிப்பூசலில் பலம் இழந்து நிற்கிறது. அங்கு யாருடன் கூட்டணி பேசுவது என்கிற முடிவு இன்னும் வராமல் குழப்பம் இருக்கிறது. இப்படியிருக்க அ.தி.மு.க இல்லாமல், பா.ஜ.க-வால் தமிழ்நாட்டில் தனியாகக் கூட்டணி அமைக்க முடியாதா… மற்ற மாநிலங்களில் ஆட்சி அமைத்ததுபோல், அ.தி.மு.க-வை வீழ்த்தித்தான் பா.ஜ.க வளர்கிறது என்று தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறாரகள். ஆனால், எங்களுக்கென்று ஒரு வலுவான கட்டமைப்பு இல்லாமல், இதை நாங்கள் செய்ததில்லை. ஏனென்றால், அப்படி ஒரு கட்சியை அழித்து நாங்கள் வளர்ந்தோம் என்றால் அது நிரந்தரமில்லை என்பது எங்கள் அனுபவம்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர் -அதிமுக - பாஜக

அ.தி.மு.க-வில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அங்கு வெகுஜனத் தலைமை இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் கொள்கை, லட்சியங்களைவிட வெகுஜனத் தலைவர்கள்தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் அலசி, ஆராய்ந்துதான் அண்ணாமலை ஒரு முடிவைத் தெரிவித்திருக்கிறார். கட்சிக்குள் விமர்சிப்பவர்கள் அவநம்பிக்கையில் பேசுகிறார்கள். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி ரிஸ்க் எடுக்க அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால், அண்ணாமலை தனியாக நிற்கலாம் என்கிறார். எல்லோரும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் யோசிக்கிறார்கள். இதில் வழிமுறைகள்தான் வித்தியாசமாக இருக்கின்றன. மத்திய தலைமை முழுக்க முழுக்க அண்ணாமலையின் குரலுக்குச் செவி சாய்க்கிறது. ஒருவேளை அதை தாமதமாக அறிவிக்கலாம். இல்லையென்றால் புத்திசாலித்தனமாகக் கையாள்வார்கள். எல்லோரும் ஒரே குரலில் பேசினால் அது ஜனநாயகம் இல்லை. இதற்கான முடிவு கூடிய விரைவில் தெரியவரும்” என்கிறார்கள்.



from India News https://ift.tt/2waRgIA

Post a Comment

0 Comments