மும்பை பைகுலாவில் வசிப்பவர் அப்துல் கதார். இவரது வீட்டில் கடந்த ஓராண்டாக அடிக்கடி தங்கநகைகள் காணாமல் போய்க்கொண்டிருந்தன. அவற்றை பேய்தான் திருடிச்செல்வதாக வீட்டில் இருந்தவர்கள் நம்பினர். வீட்டை யாரும் பூட்டிச்செல்லாத நிலையில் தங்கநகைகள் திருட்டு போயிருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பேய்தான் திருடி இருக்கவேண்டும் என்று நம்பினர். இதனால் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து போலீஸில் புகார் செய்யவில்லை. ஆனால் திடீரென வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை காணவில்லை. உடனே பேய் பணத்தை எப்படி திருடும் என்று நினைத்து இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்தனர்.
அப்துல் தனது புகாரில் பணம் காணாமல் போனதை மட்டுமே குறிப்பிட்டிருந்தார். ஆனால் போலீஸார் விசாரணை நடத்திய போதுதான் வீட்டில் அடிக்கடி தங்கநகைகள் காணாமல் போனதாகவும் தெரிவித்தனர். உடனே ஏன் அது குறித்து போலீஸில் புகார் செய்யவில்லை என்று கேட்டதற்கு, அவற்றை பேய் திருடிச்சென்றிருக்கும் என்று நினைத்து போலீஸில் புகார் செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அவர்களிடம் மேற்கொண்டு விசாரித்ததில் வீட்டில் பேய் இருக்கிறது என்ற பயத்தில் ரூ.3.75 கோடி மதிப்புள்ள வீட்டை வெறும் 1.5 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்து ஆட்களை தேடிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. அடிக்கடி தங்கநகைகள் திருடு போய் வந்ததால் வீட்டில் உள்ளவர்கள்தான் திருடியிருக்கவேண்டும் என்று போலீஸார் முடிவுக்கு வந்தனர். இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி சுஹாஸ் மானே, ``தங்க ஆபரணங்கள் அடிக்கடி திருடு போய் வந்தது குறித்து தெரிந்தவுடன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள்தான் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று நினைத்தோம். அடிக்கடி யாரெல்லாம் வீட்டுக்கு வருவார்கள் என்று விசாரித்தபோது அப்துல் உறவினர் உசேன் பத்ராவாலா அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. சூரத்தைச் சேர்ந்த உசேன் தன் 13 வயது சகோதரியுடன் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். உடனே அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் மற்றும் 30 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தன் சகோதரியை அனுப்பி அடிக்கடி உசேன் திருடி வந்தது தெரியவந்துள்ளது.
13 வயது மைனர் சிறுமியை எச்சரித்து விட்டுவிட்டோம். ஆனால் உசேனும், அவர் நண்பர் அப்பாஸ் அத்தாரியும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மூட நம்பிக்கையில் நம்பிக்கை வைக்காதீர்கள் என்று கவுன்சிலிங் கொடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். உசேனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பணம் அப்துல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸார் இந்தத் திருட்டை கண்டுபிடித்திருப்பதால் அப்துல் தனது வீட்டை பாதி விலைக்கு விற்பனை செய்வதிலிருந்து தப்பித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/bSZfrl4
0 Comments