142 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட தங்க நிற மண்ணுள்ளி பாம்பு... இதன் சிறப்புகள் இதுதான்!

இந்திய துணைக்கண்டத்தின் முதல் பல்லுயிர் சூழல் மண்டலமாக நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலகின் வன வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் இந்த நீலகிரி உயிர் சூழல் மண்டலம் அரியவகை உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகிறது. மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் கடைசி புகலிடமாகவும் இருக்கிறது. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள வனங்களைக் கொண்டிருக்கும் இந்த பல்லுயிர் பெருக்க மண்டலத்தில் இன்றளவும் அறியப்படாத உயிரினங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அரியவகை பாம்பினமான தங்க கவசவாலன் எனும் விஷமற்ற மண்ணுளி இனம் ஒன்று 142 ஆண்டுகளுக்கு பின் தென்பட்டுள்ளது. இந்த பாம்பு குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தங்க கவசவாலன்

இந்த அரியவகை மண்ணுளி பாம்பு குறித்து தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், "வயநாடு பகுதியில் 8 வகையான மண்ணுளி பாம்புகள் உள்ளன. இவற்றில் (Golden shieldtail) எனப்படும் தங்க கவசவால் பாம்பினம் மிக அரிதாகவே காணப்படுகின்றன. ரிச்சர்டு ஹென்றி என்பவரால் 1800-ம் ஆண்டு முதல் முதலில் இந்த பாம்பு ஆவணப்படுத்தப்பட்டது. இதன் உடலமைப்பு மற்றும் நிறத்தின் காரணமாக இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. அதன் பிறகு ஒரு சில இடங்களில் மட்டுமே தென்பட்டுள்ளது. வயநாடு பகுதியில் மண்ணை அகழும் பணியில் அண்மையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் இந்த பாம்பைக் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.142 ஆண்டுகளுக்கு பின் தற்போது இது தென்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் வாழிடம் மற்றும் தகவமைப்பு போன்றவற்றை ஆய்வு செய்து வருகிறோம்" என தெரிவித்துள்ளனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/hyV6fvW

Post a Comment

0 Comments