அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் பேசப்பட்டது. அதன் பிறகும் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை எனவும், மாணவர் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், அரசு தரப்பிலிருந்து மாணவருக்கு, `நீ ஆராய்ச்சிக்கான உபகரணங்கள் வாங்குவதற்காகத்தான் நிதி கேட்கிறாயா?" என்பன போன்ற கேள்விகளுடன் மாணவர் பாரதிதாசனுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதனால் தளர்வடைந்த மாணவர், `நான் எல்லா ஆதாரத்துடனும், என் ஆசிரியர் நான் வாங்க வேண்டிய உபகரணங்கள் குறித்து எனக்கு கொடுத்த பட்டியல்களையும் ஆதாரப்பூர்வமாக அனுப்பியிருந்தேன். அதன்பிறகும் அரசு முதலிருந்து தொடங்குகிறது.
என் மீது என் ஆசிரியர்கள் வைத்த நம்பிக்கையை உடைத்திருக்கிறீர்கள். உங்கள் அதிகாரத்தால் ஒடுக்க நினைக்கிறீர்கள். ரோஹித் வெமுலாவுக்கு நடந்தது எனக்கும் நடக்கிறது" எனக் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவுக்குப் பதிலளிக்கும் விதமாக சமூக நீதித்துறை அமைச்சகம் தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், ``மாணவர் உரிய ஆவணங்களைச் சரிவர சமர்ப்பிக்காமல் இரண்டாம் ஆண்டிற்கான (2026-2027) கல்வி உதவித்தொகையினை முழுமையாக வழங்கிட கோரிவந்த நிலையில், மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அவர் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்த வேண்டிய முழு கல்விக்கட்டணம் ரூ.5.57 லட்சம் பல்கலைக்கழகத்தின் வங்கிக்கணக்கிற்கும் மற்றும் மாணவருக்கு வாழ்க்கை செலவினமாக ரூ.6.65 லட்சம் மாணவரது வங்கிக்கணக்கிற்கும் ஆக மொத்தம் ரூ.12.00 லட்சம் (RM 23460 + RM 27600 = RM 51060) இரண்டாம் கல்வியாண்டிற்காக 2026-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாணவர் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 லட்சம் (RM 83300) விடுவிக்குமாறு கோரியுள்ளார். அதில் மாணவர் சமர்ப்பித்துள்ள உத்தேச செலவினப் பட்டியல்கள் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக பதிவாளரால் பரிந்துரை செய்யப்படவில்லை.
இந்நிலையில் மாணவர் முதலாமாண்டு படிப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காகச் சமர்ப்பித்த ஆவணங்களில், ரூ.8,17,962/-க்கான பட்டியல்கள் ஏற்புடையதாக இல்லை என்பது குறித்தும், மாணவரால் ஆராய்ச்சி செலவினங்களுக்காக வாங்கப்பட்ட பொருட்கள் (Research Materials) மற்றும் அதற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் (Proof of Payment) ஆகியவை தொடர்பாக 20.08.2026 அன்று ஏற்கனவே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் சரியான விளக்கம் மாணவரால் அளிக்கபடவில்லை.
மேலும் மாணவர் பயிலும் National University of Malasiya (Universiti Kebangsaan Malaysia) பல்கலைக்கழகப் பதிவாளருக்கு மாணவர் திரு.பாரதிதாசன் என்பவரது இரண்டாம் ஆண்டு கல்விக்கான ஆராய்ச்சி செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சம் (RM 83300) தொடர்பாக, மாணவர் தெரிவித்துள்ள ஆராய்ச்சி பொருட்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் அம்மாணவரின் ஆராய்ச்சிக்குத்தான் தேவைப்படுகிறது என்பதை பல்கலைக்கழகம் பரிந்துரைத்து அனுப்புமாறு தெரிவித்து இன்று (17.09.2026; 13:01 Hrs) ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டு, அதன் நகல் மாணவருக்கும் அனுப்பப்பட்டது.
பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்ற விவரமும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது.
17.09.2026 - சமூகநீதி துறை செய்தி வெளியீடு
— Office of Social Justice Minister (@OffVanniArasu) September 17, 2026
மலேசிய நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) மேற்கொண்டுவரும் திரு. பாரதிதாசன் என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என x தளத்தில் வெளியான… pic.twitter.com/QBAoPS6sdl
இந்நிலையில் மேற்படி மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன், மாணவர் எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றைப் பதிவுசெய்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பதிவு செய்துள்ளார். மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 லட்சம் மற்றும் இரண்டாமாண்டிற்கு ரூ.12.00 லட்சம் ஆக மொத்தம் ரூ.48.00 லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவரது காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
from India News https://ift.tt/K7LIEOm
0 Comments