தெலங்கானா காங்கிரஸ்: உட்கட்சிப் பூசல்; அமைச்சரவையிலிருந்து சுரேகா வெளியேற்றம்; என்ன நடக்கிறது?

தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் கொண்டா சுரேகா. இவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில், வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், சுரேகா-வின் மகள் கொண்டா சுஷ்மிதா, 2028 சட்டமன்றத் தேர்தலில் வாரங்கள் மாவட்ட பார்கல் தொகுதியில் போட்டியிட விருப்பதாகச் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்

இதற்கிடையில் பார்க்கல் தொகுதிக்குச் சென்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, தற்போதைய எம்.எல்.ஏ ரெவூரி பிரகாஷ் ரெட்டிக்கு தன் ஆதரவை அறிவித்தார். இதனால் கொண்டா சுஷ்மிதா - ரேவந்த் ரெட்டி ஆதரவாளர்களுக்கு மத்தியில் கருத்து மோதல் நடைபெற்றது.

இதற்கிடையில், கொண்டா சுஷ்மிதா, ``நான் பார்க்கல் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். தேர்தலுக்கான ஏன் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? ரெவூரி பிரகாஷ் ரெட்டியை இப்போதே ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் போட்டியிடச் சொல்லுங்கள்.

பார்கல் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக நான்தான் வெற்றிபெறுவேன். ரேவந்த் ரெட்டி அகந்தைப் பிடித்தவர். எனக்கான சீட்டைத் தீர்மானிக்க அவர் யார்? தெலங்கானா காங்கிரஸ் தலைமை அடிமட்டத் தொண்டர்களைப் புறக்கணிக்கிறது. கட்சிக்குள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்துகிறது" எனக் காட்டமாக விமர்சித்தார்.

இதற்கிடையில், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி, அமைச்சர் சுரேகா-விடம் `மகள் கருத்து குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு அமைச்சர் சுரேகா, ``ஒருவரின் கருத்துக்கு அவர் குடும்பத்தைச் சார்ந்த மற்றவரைப் பொறுப்பேற்கச் சொல்வதோ, குடும்ப உறவு என்பதற்காக மட்டும் மற்றவரிடம் விளக்கம் கேட்பதோ தவறானது" என விளக்கமளித்தார்.

மேலும், இதனால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தெலங்கானா பொறுப்பாளர் மீனாட்சி நடராஜன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

ஆனால், `அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது.

அமைச்சர் சுரேகா 3-ம் தேதி, ``என் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு யாரோ ஒருவரின் தூண்டுதலே காரணம். மேலும், முதலமைச்சர் குறித்து தனது மகள் கூறிய கருத்துக்களில் எனக்குப் பங்கில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில், ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையிலிருந்து சுரேகா வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுரேகா, ``ஒரு மரண தண்டனை கைதியைக் தூக்கிலிடுவதற்கு முன் கூட, அவரது கடைசி ஆசை என்னவென்று கேட்பார்கள். அதுபோல, என்னை நீக்குவதற்கு முன்பு, 'நீங்கள் ராஜினாமா செய்யுங்கள், இல்லையெனில் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுப்போம்' என்று மேலிடம் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்.

என்னை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றியது பழிவாங்கும் நடவடிக்கை. 2028 தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்வதற்கு முன்பே, ஒரு தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, அவரது வெற்றியை உறுதி செய்யுமாறு கட்சித் தொண்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதற்கு எதிர்வினையாற்றிய என் மகள், 'மற்ற தொகுதிகளைப் பரிசீலிக்காமல் ஒரு தொகுதியின் வேட்பாளரை ஏன் அவசரமாக அறிவிக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார். இந்தத் தொகுதியில் நாங்கள் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளோம். நானும் அந்தத் தொகுதியின் விருப்ப மனுதாரர்.

யாருடனும் கலந்தாலோசிக்காமல் எப்படி ஒரு வேட்பாளரை அறிவிக்க முடியும்? அதுதான் பிரச்னை. அதேபோல கடந்த காலத்தில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்களையே பகிரங்கமாக விமர்சித்த பல அரசியல்வாதிகளுக்கு எந்தக் கடுமையான தண்டனையும் கொடுக்கப்படவே இல்லை.

ஆனால், நான் கட்சியையோ அல்லது முதலமைச்சரையோ எங்கும் விமர்சிக்கவில்லை. இருப்பினும், எனக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். நான் பதிலளித்த பிறகும், திருப்தியடையாமல் எனக்கு எதிராகச் சதி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். என் மகளின் வார்த்தைகளைப் பயன்படுத்தி, என் மீது பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது மனதை உடைக்கிறது.

இருப்பினும், நாங்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகப் போவதில்லை. இந்தக் கட்சியில் எனது பயணம் சுமார் 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. எனது கணவரும் பல ஆண்டுகளாக காங்கிரஸுடன் தொடர்பில் இருந்தவர்தான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/03ltFwP

Post a Comment

0 Comments