புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
சட்டசபையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கடந்த காலத்தில் மாநில அந்தஸ்து பெறுவதில் மாற்று கருத்துகள் இருந்தது.
ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. நிர்வாக ரீதியில் பல தடைகள் இருப்பதை எம்.எல்.ஏக்களும், அரசு ஊழியர்களும், மக்களும் அறிந்துள்ளனர்.
மாநில அந்தஸ்து கேட்டு பல பிரதமர்களைச் சந்தித்து பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் பார்ப்போம் எனக் கூறுவார்கள். அதனால் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக மேலும் அழுத்தம் தர வேண்டும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நாடாளுமன்றம் முன்பு நேரு எம்.எல்.ஏ போராட்டம் நடத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். அதேபோல தி.மு.க எம்.பி சிவா பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அதற்காக புதுவை எம்.பி-க்களும் குரல் கொடுக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.
பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில், `மாநிலத்துக்கு மத்திய அரசு நிதி, திட்டங்களை வழங்குகிறது. இருப்பினும் ஒரு குறை உள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தேன்.
முதலமைச்சர், அமைச்சர்களுக்குப் பல சங்கடங்கள் இருக்கின்றன. அனைத்துக்கும் கவர்னரிடம் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு ஒரே தீர்வு மாநில அந்தஸ்து பெறுவதுதான். கவர்னர் உரையில் வழக்கமாக அரசு என்ன திட்டங்கள் செய்துள்ளது, எதிர்காலத்தில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதைக் கோடிட்டு காட்டுவது மட்டுமே இருக்கும்.
கடந்த காலத்தைவிட புதுச்சேரி தற்போது பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. 4,500 இளைஞர்களுக்கு நேரடியாக அரசுப் பணி வழங்கியுள்ளோம். அதேபோல இன்னும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும். புதுவையில் அமைய உள்ள தொழில்பேட்டைகள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் மூலம், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அரசின் பல திட்டங்களுக்கான கோப்புகள் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கோப்புகள் தேங்கிக் கிடப்பதால் திட்டங்கள் நிலுவையில் கிடக்கின்றன. அதில் மாற்றம் தேவை. சமீபகாலமாக பல கோப்புகளை நாம் அதிகாரிகளுக்கு அனுப்புவதே இல்லை. அவற்றிற்கு இங்கேயே தீர்வு காண்கிறோம்.

அதிகாரிகள் கோப்புகள் மீது கேள்வி மேல் கேள்வி எழுப்பாமல், அதற்கு அனுமதி வழங்க முன்வர வேண்டும். புதுச்சேரியில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் உள்ளாட்சித் தேர்தலை நான்தான் நடத்தினேன். ஆனால் எதிர்பார்த்தபடி உள்ளாட்சிக்கான நிதி வரவில்லை. உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். நிலுவையில் உள்ள ஆறு மாத அரிசிக்குப் பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்.
முதல்கட்டமாக இரண்டு மாத பணம் ஓரிருநாளில் வங்கியில் செலுத்தப்படும். அதன்பிறகு நான்கு மாதங்களுக்கான பணம் செலுத்தப்படும். ரேஷன் கடைகளை முழுமையாகச் செயல்படுத்தி, அங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்” என்றார்.
from India News https://ift.tt/k8UZIYA
0 Comments