நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் பிரம்மாண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். 'சலோ சன்சாத்' என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் மழை மற்றும் பலத்த போலீஸ் தடுப்புகளையும் மீறி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். போராட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி மேற்கொண்டும் தாக்குதல் நடத்தியதில் , நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.

இப்போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பா.ஜ.க அரசு நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டதாகக் கடுமையாகச் சாடினார். மாணவர்களின் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன்முறையாக தனது மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ``நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை வேண்டுமென்றே முடக்குவதற்காக ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மாணவர்களை அரசியல் கருவிகளாக வெட்கமின்றிப் பயன்படுத்துகின்றனர். மேலும், பிரதமரின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, பாதுகாப்பு விதிகளையும் காங்கிரஸ் மீறியுள்ளது. நாடாளுமன்ற அவையில் நீட் தேர்வு மற்றும் இளைஞர்களின் நியாயமான கவலைகள் குறித்து விவாதிக்க அரசு 100 சதவீதம் தயாராக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான விவாதத்திற்குப் பதிலாக 'அரசியல் நாடகத்தை' தேர்ந்தெடுத்துள்ளது.

மாணவர்களுக்கான தீர்வுகளைக் காண்பது அவர்களின் நோக்கமல்ல. செய்திகளில் இடம் பெறுவதற்காகப் பிரச்னையை உருவாக்குவதே அவர்களின் நோக்கம். விவாதத்திற்கான கதவுகள் திறந்திருந்தபோதிலும் ராகுல் காந்தி வேண்டுமென்றே மோதலை உருவாக்கப் பார்க்கிறார். இந்திய மாணவர்கள் அரசியல் பிரசாரத்திற்கான வெறும் பொருள்களாகப் பயன்படுத்தப்படுவதை விட மேலான தகுதி படைத்தவர்கள். கூச்சல்களுக்குப் பதிலாகத் தீர்வுகளையும், முடக்கத்திற்குப் பதிலாகப் பொறுப்புணர்வையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவான பதில்களையும், தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்களையும் வழங்க மத்திய அரசு முழுமையாக உறுதியளித்துள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/xVZh9Lg
0 Comments