ஆகாஷ் டெலிசன் காவல் மரணம்: "உடலை அரசே கண்ணியமான முறையில் அடக்கம் செய்யலாம்" - நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை அருகேயுள்ள மானாமதுரையில் கொலை செய்ய முயற்சித்த வழக்கு ஒன்றில் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். 

போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் டெலிசன் கைதான இரண்டாவது நாளே மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இறப்பதற்கு முன் நீதிமன்ற நடுவரிடம் ஆகாஷ் டெலிசன் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசார் தன்னுடைய காலை உடைத்ததாகக் கூறியிருந்தது, தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து இறப்பிற்குக் காரணமான காவல்துறையினரைக் கைது செய்யும் வரை ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்க மாட்டோம் எனப் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக ஆகாஷ் டெலிசனின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "50 லட்ச ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, ''விசாரணை அதிகாரி, முடிந்தவரை விரைவாக விசாரணையை முடித்து, சட்டப்படி அதிகார வரம்புக்குட்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியாக கௌரி, "மனுதாரர்  கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போது வரை, உடலைப் பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. 

இறந்தவருக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். ஆகவே ஆகாஷின் பெற்றோர் மாலை 5 மணிக்கு உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் காவல்துறையே உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும்'' என உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

இதையடுத்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆகாஷின் குடும்பத்தினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகாஷ் டெலிசனின் இறப்பிற்குக் காரணமாக இருந்த காவல்துறையினரைக் கைது செய்யும் வரை, உடலைப் பெறப்போவதில்லை எனக் குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதவரையில், உடலைப் பெற்றுக்கொள்ள மனுதாரர் விரும்பவில்லை. பிரேதப் பரிசோதனை முடிந்துவிட்டது. அனைத்து மருத்துவச் சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன.

உடலைக் காலவரையின்றி தொடர்ந்து பாதுகாத்து வைப்பதில் பயனில்லை. சட்டப்பூர்வ நடைமுறைகள் நிறைவடைந்த பின்னரும் ஒரு உடல் உரிமை கோரப்படாமல் இருந்தால், அரசு செலவில் அதை அடக்கம்  செய்ய அரசுக்குச் சட்டப்படி அதிகாரம் உள்ளது. ஆகாஷ் டெலிசன் உடலைக் கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்ய உடனடி நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இறந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பின்பற்றிய மத நம்பிக்கை, வழக்கங்கள், நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்'' என்றார்



from India News https://ift.tt/LNAbaDG

Post a Comment

0 Comments