இயற்கை எழில் கொஞ்சும் அழகோடு, அரபிக்கடலின் மடியில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு சொர்க்கப் பூமிதான் லட்சத்தீவு.
ஆனால், அந்த அமைதியான அலைகளுக்குப் பின்னால், அங்கு வாழும் மக்களின் கண்ணீர்க் கதைகள் வெளி உலகிற்குப் பெரும்பாலும் எட்டாமலேயே போய்விடுகின்றன.
லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்து அங்குள்ள சூழலை நம்மிடம் டிராவல் வ்லாகர் (Travel Vlogger) ப்ரியா பகிர்ந்துகொண்டார்.

லட்சத்தீவு மக்களின் கண்ணீர்க் கதை!
லட்சத்தீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசிய அவர், "நான் ஒரு டிராவல் வ்லாகர் (Travel Vlogger). பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவிற்குள்ளும் தொடர்ந்து பயணம் செய்து வருகிறேன்.
சமீபத்தில் நான் லட்சதீவிற்கு சென்றிருந்தேன். இதற்கு முன் நான் காஷ்மீர் கூட சென்றிருக்கிறேன். பொதுவாக, இந்தியாவிற்குள் நாம் பயணிக்கும்போது சில பிரச்சனைகள் நமக்குத் தெரிந்திருக்கும், சில பிரச்னைகள் தெரியாமல் இருக்கும்.
காஷ்மீரில் நடக்கும் பிரச்னைகள் குறித்து ஏற்கெனவே தெரியும். அந்தவகையில் நான் காஷ்மீருக்கு சென்றபோது அங்கு சில பதற்றமான சூழல்களையும் பார்த்தேன். ஆனால், லட்சத்தீவிற்கு எந்தவித முன்திட்டமும், அங்குள்ள பிரச்னைகள் மற்றும் அரசியல் சூழல் பற்றிய பெரிய ஐடியா இல்லாமல்தான் சென்றேன்.
இதற்குத் தீர்வே இல்லையா?
தீவிற்குச் சென்று இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தபோது அங்கிருந்த பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் அனைத்தும் மூன்று நாட்களாக இரண்டு தெருக்கள் தாண்டி நீண்ட வரிசையில் இருசக்கர வாகனங்கள் நின்றுகொண்டிருந்தன.
அந்தத் தெருக்களில் நின்றிருந்த சில ஆண்களிடம் நான் விசாரித்த பொழுது, 'பெட்ரோல் இல்லை, சரக்குக் கப்பல் இன்னும் துறைமுகத்தில் வந்து நிற்கவில்லை. இங்கு எப்பொழுதுமே இந்தப் பிரச்னை இருக்கும்' என்று சொன்னார்கள்.
இதற்குத் தீர்வே இல்லையா? கப்பல் எப்பொழுது வரும்? ஒரு கப்பல் வரத் தாமதமானால், மாற்று வழியில் மற்றொரு கப்பலுக்கு ஏற்பாடு செய்ய மாட்டார்களா? இங்கு மொத்தம் பத்து தீவுகள் இருக்கின்றனவே?' என்று கேட்டேன்.

அரசியல்வாதிகள் இது குறித்துப் பேசவில்லையா?
அதற்கு அவர்கள் 'நாங்கள் இதைப் பற்றிக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம்; ஆனால், எந்தத் தீர்வும் இல்லை, யாரும் இதைக் கண்டுகொள்வது இல்லை.
இங்கு எங்களுக்குப் பல பிரச்சனைகள் இருக்கின்றன. கப்பல் வருவதற்கு இன்னும் ஐந்து நாட்கள் ஆகும். அதுவரை நிலைமை இப்படித்தான் இருக்கும். எனவே, தீவு முழுவதற்கும் நாங்கள் நடந்தேதான் செல்வோம்' என்று கூறினார்கள்.
அவர்கள் கூறியது போல அனைவரும் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் நடந்தேதான் சென்றுகொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் அங்கு நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடுதான்.
'இந்தப் பிரச்சனையை யாரும் பெரிதுபடுத்தவில்லையா? தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள் அல்லது டிராவல் வ்லாகர்ஸ் என யாருமே இதனைப் பற்றிப் பதிவு செய்யவில்லையா? அரசியல்வாதிகள் இது குறித்துப் பேசவில்லையா?' என்று நான் அவர்களிடம் கேட்டேன்.
எங்களுக்கென்று ஊடகம் இல்லை...
அதற்கு அவர்கள், 'எங்களுக்கென்று தனியாக எந்தத் தொலைக்காட்சி ஊடகமோ அல்லது செய்தியாளர்களோ கிடையாது. இங்கு டிராவல் வ்லாகர்ஸ் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து இதைப் பற்றிப் பேசுவதில்லை.
கம்யூனிஸ்டுகள் மட்டும் மக்களின் பொதுமேடைகளில் அவ்வப்பொழுது இதைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், பெரிய அளவில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. அவர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள், அவ்வளவுதான்' என்று கூறினர்.
இவ்வளவு காலமாகப் பிரச்சனை நடக்கிறது என்கிறீர்கள், நீங்கள் இதற்கெல்லாம் கேள்வி கேட்க மாட்டீர்களா? கண்டிப்பாக நீங்கள் யாரிடமாவது முறையிட்டிருக்க வேண்டும் அல்லவா? இங்கு அரசியல்வாதிகள் எல்லாம் இருப்பார்கள்தானே, அவர்களிடம் கேட்க வேண்டியதுதானே?' என்று கேட்டேன்.

தீவை தின்று செரிக்கும் தனியார் முதலாளிகள்
அதற்கு அவர்கள், 'இல்லை, நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், எங்களின் குரலை அரசுக்குக் கொண்டு சேர்க்கும் அளவுக்கு எங்களுக்குக் குரல் பலம் கிடையாது. இங்குப் பெரிய அளவில் அரசியல் ஆதிக்கம் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இப்போது ஆள்பவர்களே சரியில்லை' என்று வேதனையுடன் கூறினார்கள். மேலும், அங்கு நிலவும் மிகக் கடுமையான அதிகார அடக்குமுறைகளைப் பற்றியும் எனக்கு விரிவாக விளக்கினார்கள்.
அகத்தி தீவு முதல் மிகச்சிறிய தீவான பித்ரா தீவு வரை உள்ள பகுதிகளை அரசு தரப்பில் ஏலம் விடுகிறார்கள். 'வளர்ச்சியை நோக்கிய அரசு' என்ற பெயரில், குஜராத்தைச் சேர்ந்த 'பிரவேக்' (Praveg) மற்றும் 'தாஜ்' (Taj) ஆகிய நிறுவனங்களுக்கு, ஏலத்தின் வாயிலாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு மக்களின் நிலங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளன.
இங்கு 'பண்டார நிலம்' என்று அழைக்கப்படும், மக்களால் தற்சமயம் பயன்படுத்தப்படாமல் தென்னை மரங்கள் நிறைந்து காணப்படும் இடங்களைத்தான் ஒன்றிய அரசு இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டிருக்கிறது.
பறிக்கப்படும் மக்கள் நிலங்கள்
அந்த வரிசையில் லட்சத்தீவில் உள்ள பித்ரா தீவு ஒட்டுமொத்தமாகப் தற்போது இருக்கக் கூடிய அமைச்சர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்த மக்களும் அதனையே என்னிடம் உறுதிபடக் கூறினார்கள். இதுபோல லட்சத்தீவின் அனைத்துத் தீவுகளிலும் இருக்கும் 'பண்டார நிலங்களை' மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்து, முதலில் அரசு நிலமாக மாற்றுகிறார்கள்.
அதன் பிறகு, அவற்றைச் சுற்றுலா மேம்பாட்டிற்காகத் தனியார் நிறுவனங்களுக்குத் தருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமன்றி, இந்த நிலங்களை இராணுவத் தேவைகளுக்காகவும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் அங்கிருக்கும் பூர்வகுடி மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர

நீதி கிடைக்க வேண்டும்!
அங்குள்ள மக்களின் முதன்மையான பிரச்சனையே, அவர்களின் நிலங்களை அரசு வலுக்கட்டாயமாகப் பறித்துத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதுதான். தீவின் வளர்ச்சிக்கானத் திட்டம் என்று கூறி, மக்களின் இடங்களைக் கையகப்படுத்தி, 'டெண்ட் சிட்டி' போன்ற தங்குமிடங்களை அமைப்பதற்காகப் பெரும் பணக்காரத் தனியார் நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஏலம் விடுகிறார்கள்.
அங்கு மிகப்பெரிய ரிசார்ட்டுகளை அமைத்து லாபம் சம்பாதிப்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தாலும்கூட, அதற்கு மதிப்பளிக்காமல், மறைமுகமாகத் திருட்டுத்தனமாக அங்குத் 'டெண்ட் சிட்டி' அமைப்பதற்கான வேலைகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் கூறினார்கள்.
இந்தப் பிரச்னைகளுக்கு எதிராக 11 பேர் கொண்ட தீவுவாசி இளைஞர்கள் பல போராட்டங்களை நடத்தி இந்தக் குற்றசம்பவங்களுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். உயர்நீதிமன்றம் அப்பாவி தீவு மக்களுக்கான நீதியை வழங்கிட வேண்டும். தனியார் நிறுவனங்களின் சதித்திட்டங்களை அரசு ஆராய்ந்து அறிந்திட வேண்டும்” என்று வேதனையுடன் லட்சதீவில் உள்ள பிரச்னைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
from India News https://ift.tt/8Iv9QHx
0 Comments