`ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் அமைச்சர்! - தவெக-வில் தஞ்சமடைந்த உடுமலை ராதாகிருஷ்ணனின் பின்னணி

உடுமலை கே. ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். விவசாய குடும்ப பின்னணி என்றாலும் கேபிள் டிவியை தனது தொழில் அடையாளமாக கொண்டிருந்தவர்.

அ.தி.மு.க - வில் இணைந்து உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களாக தொடர்ந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வந்தவர். 2016- ல் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.‌

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அ.தி.மு.க-வில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்த வந்த இவர், நடந்து முடிந்த தேர்தலில் 2,882 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமாரிடம் தோல்வியைத் தழுவினார்.

தற்போது உடுமலை ராதாகிருஷ்ணன் த.வெ.க- வில் தஞ்சமடைந்துள்ளார்.

உடுமலை ராதாகிருஷ்ணன்

கட்சி மாறிய பின்னணி குறித்து பேசும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், " திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டதால், கட்சித் தலைமை மீது அவர் நீண்ட நாள்களாக வருத்தத்தில் இருந்தார்.‌

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க - வில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான செயல்பாடுகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நீண்ட யோசனையில் இருந்ததார். புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள த.வெ.க- வில் இணைந்தால் அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளவும் தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளவும் அது வசதியாக இருக்கும் என அவருக்கு நெருக்கமான சிலர் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

த.வெ.க- வில் அவருக்கு மாவட்டச் செயலாளர் அல்லது வாரியத் தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம்" என்கிறார்கள்.

பிராந்திய அளவிலான நிர்வாகிகளும் தற்போது அதிமுக-வில் இருந்து தவெக செல்வது, அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.



from India News https://ift.tt/liOc96q

Post a Comment

0 Comments