தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து விஜய் தரப்பு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவு கடிதங்கள் இல்லை என ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தரப்பு தெரிவித்துள்ளது.

மறுபுறம், ஒரு புதிய தேர்தலைத் தவிர்க்கவும், தவெக-வைத் தடுக்கவும் திமுக - அதிமுக கூட்டணியில் ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கவும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தவெக-வுடன் கூட்டணி இல்லை என்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார்.
இந்த "அதிர்ச்சி" கூட்டணி முயற்சி மக்கள் தீர்ப்பைப் புறக்கணிக்கும் செயல் என தவெக சாடியுள்ளது. ஒருவேளை திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயன்றால், தவெக-வின் 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும், இதன் மூலம் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விபரீத சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஷால் தன் எக்ஸ் பக்கத்தில், ``அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு, த.வெ.க அல்லாத வேறு ஏதேனும் ஒரு தரப்பு, குறிப்பாகக் கற்பனைக்கே எட்டாததும் அதிர்ச்சியூட்டக் கூடியதுமான திமுக-அதிமுக கூட்டணி அதிகாரத்திற்கு வருமானால், ஒரு குடிமகனாகவும் வாக்காளனாகவும் நான் காண்கின்ற விளைவு, சாமானிய மக்கள் மத்தியில் பேரழிவுமிக்கதாகவும் விபரீதமானதாகவும் அமையும். இது எவருக்கும் சற்றும் ஏற்புடையதாக இருக்காது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/XfjpAB1
0 Comments