ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; அலறிய மக்கள்... விருந்தில் நடந்தது என்ன?!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சனிக்கிழமை இரவு 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க' விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிச் சத்தம் போன்ற பலத்த சத்தங்கள் கேட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள் "கீழே குனியுங்கள், கீழே குனியுங்கள்!" என்று கூச்சலிட்டனர். அரங்கில் இருந்த சுமார் 2,600-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் உயிரைக் காத்துக்கொள்ள மேசைகளுக்கு அடியிலும், நாற்காலிகளுக்குப் பின்னாலும் பதுங்கினர். அங்கிருந்த பணியாளர்கள் அரங்கின் முன் பகுதியை நோக்கி ஓடினர்.

ட்ரம்ப் நிகழ்ச்சி
ட்ரம்ப் நிகழ்ச்சி

சத்தம் கேட்ட அடுத்த சில வினாடிகளில், நவீன ஆயுதங்கள் ஏந்திய சீக்ரெட் சர்வீஸ் (Secret Service) ஏஜெண்டுகள் அரங்கிற்குள் நுழைந்து நிலைமையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேடையில் இருந்த ட்ரம்ப் மற்றும் மெலனியா முதலில் மேடைக்குப் பின்னால் குனிந்து கொண்டனர், பின்னர் ஏஜெண்டுகள் அவர்களைப் பாதுகாப்பாக அரங்குக்கு வெளியே அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மிகச் சிறப்பாகச் செயல்பட்ட சீக்ரெட் சர்வீஸ் மற்றும் சட்ட அமலாக்கத் துறையினருக்குத் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதுகாப்புப் படையினர் அபாரமாகச் செயல்பட்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளித்தால் நிகழ்ச்சியைத் தொடரலாம் என்று பரிந்துரைத்தேன்.

பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு விருந்து நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. அடுத்த 30 நாட்களுக்குள் இந்த நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட நபர் உயிருடன் இருப்பதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சட்ட அமலாக்கத் துறையினர் தொடர்ந்து சம்பவ இடத்தைப் பரிசோதித்து வருகின்றனர்.



from India News https://ift.tt/WGP9KrS

Post a Comment

0 Comments