TVK: விஜய் முன் நிறுத்தப்பட்ட `திடீர்' வேட்பாளர் - திக்குமுக்காடும் திருப்பத்தூர் தவெக!

திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் டாக்டர் என்.திருப்பதி. 2026 சட்டமன்றத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் சீட் எதிர்பார்த்து, அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், அந்தத் தொகுதியை பெரிதும் எதிர்பார்த்திருந்த அ.ம.மு.க-வுக்கு வேறு வழியில்லாமல் திருப்பத்தூர் தொகுதியை ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் என்.டி.ஏ கூட்டணியின் தலைவரான எடப்பாடி பழனிசாமி.

டாக்டர் என்.திருப்பதி

இதனால், அப்செட் ஆன ஒன்றியச் செயலாளர் திருப்பதி கொஞ்சம்கூட யோசிக்காமல் அடுத்த நொடியே த.வெ.க-வில் டிக்கெட் எதிர்பார்த்து காய்நகர்த்தினார். அதுவரை `த.வெ.க-வில் போஸ்டர் ஒட்டியவரும், உழைப்பவருமே மேலே வர முடியும்’ என்று புஸ்ஸி ஆனந்த் சொன்னதை வேதவாக்காக நம்பிக்கொண்டிருந்த திருப்பத்தூர் தொகுதி த.வெ.க-வினருக்கும் அதிர்ச்சிக் காத்திருந்தது. ஏனெனில், தொகுதிக்கான செலவை ஏற்றுக்கொள்வதாக திருப்பதி கூறிய ஒரே காரணத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட உடனேயே த.வெ.க-வில் வேட்பாளருக்கான டிக்கெட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 29-ம் தேதி, த.வெ.க தலைவரான விஜய் வேட்பாளர்களை அறிவித்து அறிமுகப்படுத்தும் வரை த.வெ.க-வில் திருப்பதி இணையவில்லை. மேடையில் அமர்ந்திருந்த திருப்பதியை பக்கத்திலிருந்த வேட்பாளர்களுமே யாரென்று தெரியாமல் குழப்பத்தில்தான் பார்த்திருக்கின்றனர். `திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் என்.திருப்பதி’ என்று பெயரைப் படித்துவிட்டு, விஜய்யுமே `யார் இவர் நம்ம கட்சிக்குப் புதுசா இருக்கிறாரே..?’ என்று திருப்பதியை வியப்பாகத்தான் பார்த்தார். விஜய் நேர்காணல் நடத்தாத ஒருசில வேட்பாளர்களில் திருப்பதியும் ஒருவர் என்கின்றனர். மேல்மட்ட டீலிங் மூலமாக திருப்பத்தூர் தொகுதிக்கான டிக்கெட்டை திருப்பதி பெற்றதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

விஜய்யுடன் டாக்டர் என்.திருப்பதி

சீட் வாங்கிய கையோடு, திருப்பத்தூருக்குத் திரும்பிய திருப்பதியை அ.தி.மு.க-வில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் வரவேற்பார்களா? அல்லது அவரின் அறிமுகமே இல்லாத த.வெ.க-வினர் வரவேற்பு கொடுப்பார்களா? என்றெல்லாம் குழப்பம் நீடித்தது. ஒருக்கட்டத்தில், ஏதேதோ செய்து கூட்டத்தை திரட்டி தன்னை த.வெ.க வேட்பாளர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட திருப்பதி அடுத்து என்ன செய்ய வேண்டும்? எனத் தெரியாமல் குழம்பிப் போனார். அதுமட்டுமல்லாமல், தன்னை எப்படி அடையாளப்படுத்தி வாக்கு கேட்பது? என்னச் சொல்லி பிரசாரம் செய்வது? என்பதும் புரியாமல், பரிதாப நிலையில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார் த.வெ.க வேட்பாளர் திருப்பதி!



from India News https://ift.tt/8rGBIOT

Post a Comment

0 Comments