விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவிற்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பத்திரிகையாளர் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேர் அநியாயமாக அவர்களின் மனைவி குழந்தைகள் கண் முன்னே கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள்.
இதற்குப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்று இருக்கின்றன. உண்மையான அரசு என்றால், தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதற்கு மாறாகப் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆதரவு தெரிவிக்கக்கூடிய நிலையை மேற்கொள்கின்றனர்.
இந்தநிலையில் இந்திய அரசு இந்தியாவைக் காக்கவும், இந்திய மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதன் காரணமாகத்தான் 7ம் தேதி அதிகாலை நேரத்தில் மிகத் துல்லியமான முறையில் நமது ராணுவம் தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்களைக் குண்டுவீசி அழித்திருக்கிறது.
இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் பொதுமக்கள் மீதல்ல, பாகிஸ்தான் ராணுவத்தின் மீதும் அல்ல. இதில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு அதிகம் இருக்கிறது.
போர் தொடங்குவது ரொம்ப எளிதானது. ஆனால் முடிவுக்கு வருவது மிக மிகக் கடினமானது. இந்த நிலையைப் பாகிஸ்தான் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
தொடர்ந்து எல்லையோர பகுதிகளில் கடந்த 13 நாட்களாகத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதை உலகம் அறியும். உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவை ஆதரித்திருக்கிறது.
நிதானமாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என, உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவின் பக்கம் ஆதரவாக இருக்கிறது.
ஆனால் பாகிஸ்தான் இவற்றையெல்லாம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கண்மூடித்தனமாக முரட்டுத்தனமாக மூர்க்கத்தனமான முறையில் காஷ்மீர் மட்டுமில்லாமல் பஞ்சாப் போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இரவு முழுவதும் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது.
இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. இருநாடுகளுக்கு இடையே போராக மூண்டு விடக்கூடாது என்பதுதான் அனைவருடைய ஒட்டுமொத்த விருப்பமாகும்.
ஐக்கிய நாட்டுச் சபை கூறும்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் உலகம் தாங்காது என்று கூறியிருப்பதைப் பாகிஸ்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே ஒரு அமைதியான ஒரு சூழல் உருவாவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் பாகிஸ்தானுக்குத்தான் அதிகமாக இருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
இப்போது நாட்டு மக்கள் அனைவரும் ஒரே முகமாக அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
நாளைய தினம் தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்திய ராணுவத்திற்கு ஆதரவான ஒரு பேரணியை நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்கிற வேண்டுகோளையும் முதலமைச்சர் விடுத்திருக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று நாளை நடைபெற இருக்கிற இந்த பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. தேர்தல் காலத்தில் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
பெண்களுக்கான உதவித்தொகை, காலை உணவுத் திட்டம், கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இப்போது குடியிருப்பு மனையினை சொந்தமாக்கக் கூடிய ஒரு புதிய முறையைக் கையாண்டிருக்கிறார்கள். இன்னும் செய்யவேண்டிய சில பணிகள், வாக்குறுதிகள் பாக்கி இருக்கின்றன. ஆனால், அவை இந்த ஓராண்டுக் காலத்திற்குள் நிறைவேற்றப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் உள்துறை அமைச்சர் நேரில் சந்தித்து கோரிக்கை கொடுத்த காரணத்தினால் தான் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் தொகை வந்திருக்கிறது.
எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது என்று பெருமையோடு சொல்லுகிறார். அவர் எடுத்த முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள்.
இன்னும் நிறையக் கோரிக்கைகள் உள்ளது. 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விதிவிலக்கு, வகுப்புவாத சட்டத்தைக் கைவிட வேண்டும், தேசிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும்,
தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.2512 கோடி கல்வி நிதியைப் பெற்றுத் தரவேண்டும். இதுபோன்ற தமிழ்நாட்டு பிரச்னைகளையும் அமித்ஷாவிடம் பேசி பெறுவதற்குரிய நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/l9xPy6m
0 Comments