கோவை அரசியலுக்கும், தி.மு.க-வுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அதிலும் தேர்தல் முடிவுகளில் கொங்கு மண்டலத்தைப் பற்றி யோசித்தாலே தி.மு.க தலைமைக்கு தலைவலிதான் மிஞ்சும். அதை சரி செய்வதற்காக இந்த முறை ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வித்தைகளில் கைதேர்ந்த செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பு அமைச்சராக நியமித்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/9ff33a6f-18cf-419c-bb6f-07395174e2e2/648c9c3d51b91.jpg)
அவரும் கட்சிக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி, கடந்தாண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பிரமாண்ட வெற்றியைப் பெற ஒரு காரணியாக விளங்கினார். அடுத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்துவந்த நிலையில், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியைக் கைதுசெய்துவிட்டது.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக சீனியர் அமைச்சரான முத்துசாமியை கோவை பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளனர். ஒரே சமுதாயம், உள்ளடி அரசியல் செய்யாதவர் உள்ளிட்ட காரணங்களால் முத்துசாமியை டிக் செய்தது தி.மு.க தலைமை. செந்தில் பாலாஜியின் ஆதிக்கத்தால் கடுப்பிலிருந்த உடன்பிறப்புகளுக்கு இந்தத் தகவல் உற்சாகத்தைக் கொடுத்தது.
`இனி கரூர் கம்பெனியின் ஆதிக்கம் இருக்காது... முத்துசாமி பெரிதாக எதையும் கண்டுகொள்ள மாட்டார்' என உற்சாக மிகுதியில் இருந்தனர். ஆனால் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கோவை தி.மு.க-வின் முதல் செயற்குழுக் கூட்டத்திலேயே அதையெல்லாம் சல்லி சல்லியாக உடைத்துவிட்டார்.
கோவை தி.மு.க செயற்குழுக் கூட்டம் வரதராஜபுரம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதுநாள் வரை கோவை தி.மு.க-வின் அனைத்து போஸ்டர்கள், பதிவுகளில் இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் நீங்கிவிட்டது. செயற்குழு தொடர்பாக கோவை தி.மு.க சார்பில் வெளியான அறிவிப்பில் செந்தில் பாலாஜியின் பெயரோ, படமோ இடம்பெறவில்லை. மேடையிலும் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெறவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/7caa08c4-9fb8-4217-809d-18ed3250ee1c/WhatsApp_Image_2023_07_08_at_20_19_11.jpeg)
உடன்பிறப்புகள் ஒட்டிய போஸ்டர்களிலும் பாதியில் செந்தில் பாலாஜி பெயர், படம் பெறவில்லை. செந்தில் பாலாஜி ஆதிக்கத்தால் காணமால்போனவர்கள் என்று போஸ்டர் ஒட்டாத குறையாக சைலென்ட் மோடில் இருந்த பல நிர்வாகிகள், உற்சாகத்துடன் மேடையிலேயே வந்து அமர்ந்தனர்.
முத்துசாமியின் கைகளிலும் எக்கச்சக்க பெட்டிஷன்களை கொடுத்து முதல் கூட்டத்திலேயே அரசியல் விளையாட்டுகளைத் தொடங்கினர் கோவை உடன்பிறப்புகள். மேடையில் பலரும் முத்துசாமி புகழ் அதிகம் பாடினாலும் பெரும்பாலான நிர்வாகிகள் செந்தில் பாலாஜி கைது குறித்தும் பேசினார்கள். அமைச்சர் முத்துசாமி பேசும்போது, “செந்தில் பாலாஜி மிக அருமையாகத் திட்டமிட்டுப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/eb8677fd-9628-4f98-845a-8da0e2342fad/WhatsApp_Image_2023_07_08_at_21_25_56.jpeg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/9fc850db-2567-4377-ab70-276c13e2483d/WhatsApp_Image_2023_07_08_at_13_34_21.jpeg)
அவரது பணி தனித்தன்மையுடன் இருந்தது. ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் மட்டுமே முழு காரணம் அல்ல. அந்தத் தேர்தலில் கோவை தி.மு.க-வினர் அருமையாகப் பணியாற்றினார்கள். செந்தில் பாலாஜி வகுத்த பாதையில் கொஞ்சம்கூட தொய்வு இல்லாமல் செல்வேன்.
செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட இந்த நிலை நீண்ட நாள் நீடிக்காது. இதற்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வரும். செந்தில் பாலாஜி மீண்டும் பணி தொடர வாய்ப்பு ஏற்படும். முதலமைச்சர் ஸ்டாலின் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு வந்துள்ளார். கட்சி, ஆட்சிப் பணிகளைச் செய்து வரும் முதலமைச்சருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/e22f30aa-cba6-46ba-a274-e8b2c215672c/WhatsApp_Image_2023_07_08_at_20_19_12__1_.jpeg)
பிரச்னைகளைத் தீர்க்க அனைவரும் இணைந்து முழுமையாக நடவடிக்கை எடுப்போம். 1,000 பிரச்னைகள் இருக்கலாம். 1,000 மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஒரு கட்சியில் ஒரே கருத்து இருந்தால் கட்சி வளராது.
போட்டி இருக்கும் போதுதான் கட்சி வளரும். ஆனால் போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். கட்சிக்குப் பிரச்னை வந்தால் அந்தப் போட்டியைக் கைவிட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தருவீர்கள் என நம்புகிறேன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/0a83cbe6-9b15-4109-9fe8-f84543adbcff/WhatsApp_Image_2023_07_08_at_20_19_12.jpeg)
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/568fe32b-942c-4172-ae59-fa3ca9ca1d6d/WhatsApp_Image_2023_07_08_at_20_19_07.jpeg)
கொங்கு மண்டலம் சரியாக இல்லை எனப் பெயரை ஏற்படுத்தியுள்ளார்கள்... அது உள்ளாட்சித் தேர்தலில் செந்தில் பாலாஜியுடன் இணைந்து முறியடிக்கப்பட்டுள்ளது. அது தொடர வேண்டும். பா.ஜ.க, அ.தி.மு.க தலைமையை ஏற்படுத்திக் கொண்டு போட்டிக்கு வர வேண்டும்.
கட்சிக்காக உழைப்பவர்கள் அனைவருக்கும் பதவி கிடைப்பதில்லை. கட்சியினர் வீட்டில் கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டமன்றத் தேர்தல் எளிதாக இருக்கும். நான் கோவைக்கு இடைக்கால பணியாகத்தான் வந்துள்ளேன். செந்தில் பாலாஜி விரைவில் வந்துவிடுவார். இங்குள்ள நடைமுறையை நீங்கள் தொடருங்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/9d07648e-50ea-42a3-88b7-8d80c108d5c2/WhatsApp_Image_2023_07_08_at_20_19_13.jpeg)
போஸ்டர்களில் எனது படத்தைப் பயன்படுத்த வேண்டாம்” என்று கூறினார். முத்துசாமியின் பேச்சை உடன்பிறப்புகள் ஆங்காங்கே வரவேற்றாலும்.. “அப்ப மறுபடியும் முதல்ல இருந்தா” என்ற குமுறல்களையும் அதிகம் கேட்க முடிந்தது.
from India News https://ift.tt/lT26waK
0 Comments