பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, கடந்த ஆண்டு தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிந்ததிலிருந்து, பா.ஜ.க-வுக்கு எதிராக தொடர் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். குறிப்பாக சீனாவின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில், உங்களின் 56 இன்ச் மார்பை நிரூபித்துக் காட்டுங்கள் அல்லது அதானியின் அறிவுரைப்படி சீனாவிடம் சரணடையுங்கள் என மோடியைச் சாடியிருந்தார்.
இந்த நிலையில், 2024-ம் தேர்தலில் வெற்றிபெற இப்போதே எதிர்க்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க அச்சுறுத்திவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தாவில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (FICCI) சார்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ``அதிகாரத்தில் உள்ளவர்களால் அச்சுறுத்த முடியாத ஒரு உண்மையான எதிர்க்கட்சி நாட்டுக்குத் தேவை என்று நினைக்கிறேன்.
எனக்கு இன்று நிறைய பேரைத் தெரியும். ஆனால் அவர்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக ஒரு கட்டத்துக்கு மேல் செல்லமாட்டார்கள். அமலாக்கத்துறை தங்கள் பக்கம் திரும்பிவிடும் என்று அச்சப்படுகிறார்கள். இந்திய ஜனநாயகத்துக்கு இது நல்லதல்ல. எனவே ஆளுங்கட்சிக்கு நண்பராக அல்லாத எதிர்க்கட்சி தேவை. அப்படிப்பட்ட பலரை நீங்கள் காணலாம். அதில் சிலர் தங்களின் வேலையைச் சத்தமாகவும், அமைதியாகவும் செய்கிறார்கள். எனவே மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். ஏனெனில் அவரை யாரும் பிளாக்மெயில் செய்ய முடியாது.
அவர் ஒரு துணிச்சல் மிகுந்த பெண்மணி. கம்யூனிஸ்ட்டுகளை அவர் எப்படி எதிர்த்துப் போராடினார் என்பதை நீங்களே பாருங்கள். 10 நாள்களுக்கு முன்பு கூட அவரை சந்தித்தேன். ஆனால் அது யாருக்கும் தெரியாது. அப்போது 2024-ம் ஆண்டு எப்படி இருக்கும், பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசினோம்" என்றார்.
மேலும் மம்தாவை சக்திவாய்ந்த பெண்மணி என்று குறிப்பிட்டதைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, ``ஒரு காலத்தில் ஜெயலலிதா அவ்வாறு இருந்தார். முன்பு மாயாவதியையும் அவ்வாறு நினைத்தேன். தற்போதைய சூழலில் மம்தா அப்படி இருக்கிறார். தலைநிமிர்ந்து நிற்கும் துணிவு கொண்ட ஒரே பெண் தலைவர் அவர்தான்" என்றார்.
from India News https://ift.tt/ayQpnZG
0 Comments