'காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவி' - டி.கே.சிவக்குமாருக்காக முடிவை மாற்றிய ராகுல்?!

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பிரச்னைகள் வெடித்தன. மூத்த தலைவர்கள் உயர்த்திய போர்க்கொடியால் தொண்டர்கள் அதிர்ச்சியை சந்தித்தனர். இதையடுத்து கட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த ஆண்டு நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

காங்கிரஸ்

குறிப்பாக, "ஒருவர் ஒரு பதவியில் 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க கூடாது. ஒருவருக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி, ஒரு குடும்பத்தை சேர்ந்த 2-வது நபர் போட்டியிட குறைந்தது 5 ஆண்டு கட்சி பணியாற்றியிருக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மறுபுறம் 'ஒருவருக்கு ஒரு பதவி என்ற உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும்" என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கவும் மறுத்துவிட்டார். இதையடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றால், ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கட்சி கொள்கை அடிப்படையில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அசோக் கெலாட்

அப்போது புதிய முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்தது. இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 82 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். இது சோனியா, ராகுல் காந்தியை அதிர்ச்சியடைய செய்தது. பின்னர் அசோக் கெலாட் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்கினார். தற்போது வரை அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இதற்கிடையில் தான் கர்நாடக தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், பாஜக, ஜே.டி.எஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் காங்கிரஸ் 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், ஜே.டி.எஸ் 19 இடங்களையும் கைப்பற்றியது. இவ்வாறு கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியிருந்தாலும் முதல்வர் பதவியில் யாரை நியமிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சச்சின் பைலட்

பின்னர் சோனியா காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி கர்நாடக மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது.

நாடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் காந்தி குடும்பத்தினரின் முடிவுக்கு நான் கட்டுப்பட வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கிறது. அதனால் நான் இந்த ஃபார்முலாவுக்கு ஒப்புக் கொண்டேன்.

டி.கே.சிவக்குமார்

சித்தராமையா முதல்வராக இருந்தால்தான் என்ன தவறு? அதனால் இந்த ஃபார்முலாவை ஏற்றுக் கொண்டேன். கட்சியின் உச்ச இலக்கு மக்களின் நலன். கர்நாடக மக்களின் நலனுக்கு நான் எனக்கு கொடுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டேன்" என்றார்.

டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ், "நான் இவ்விவகாரத்தில் முழுமையாக மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஆனால் கடமையைத் தட்டிக் கழிக்க முடியாது. அதனால் சிவக்குமார் ஏற்றுக் கொண்டார். காலம் பதில் சொல்லும். டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என நினைத்தேன் ஆனால் கிடைக்கவில்லை.

கர்நாடக தேர்தல்

அதில் எனக்கு வருத்தமே" என்றார். மறுபுறம் எற்கெனவே கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் இருக்கும் நிலையில் தற்போது துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டிக்கிறது. இதன் மூலம் 'காங்கிரசில் ஒருவருக்கு ஒரு பதவி தான்' என்ற தனது முடிவை ராகுல் காந்தி மாற்றிக்கொண்டாரா? என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "கடந்த ஆண்டு நடத்த காங்கிரஸ் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஒருவருக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி, 5 ஆண்டுகள் கட்சியில் பணியாற்றியிருந்தால் இரண்டாவது நபருக்கு பதவி வழங்கப்படும், 5 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் பதவியில் இருக்கக்கூடாது, 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 50% பேர் கட்சி பதவிகளில் இருக்க வேண்டும்.

ப்ரியன்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மைனாரிட்டி பிரிவுகளை சேர்ந்தவர்கள் 50% கட்சி பதவிகளில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை முக்கிய தீர்மானங்களாகும். ஆனால் 50 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் 50% அளவுக்கு இருக்கிறார்களா? என்று தெரியாது?. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மைனாரிட்டி பிரிவுகளை சேர்ந்தவர்கள் 50% கட்சி பதவிகளில் இருக்கிறார்களா என்பதற்கும் சரியான புள்ளி விவரங்கள் இல்லை" என்றார்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி என்பதும் கடைபிடிக்கப்படவில்லை. இதற்கு சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை எடுத்துக்காட்டாக சொல்ல முடியும். மேலும் கார்கேவின் மகனே எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இதற்காக தான் 5 ஆண்டுகள் கட்சியில் வேலை செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அப்போது தான் பிரியங்கா காந்தி போன்றவர்கள் உள்ளே வர முடியும்.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

ஒருவருக்கு ஒரு பதவி என்பது டி.கே.சிவக்குமார் விஷயத்தில் செயல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வரும் காலத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்க்கு சிறப்பு சலுகை வழங்கி விடுவார்கள். ஏனெனில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அவர் முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். ஒருவேளை கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவரை எடுத்தால் சரியாக இருக்காது" என்றார்.

கோபண்ணா

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் கோபண்ணாவிடம் விளக்கம் கேட்டோம். "சில நேரங்களில் சில விதிகளில் விலக்கு வழங்கி தான் ஆக வேண்டும். இந்த நேரத்தில் டி.கே.சிவக்குமார் இரண்டு பதவிகளில் இருந்தால் தான் சரியாக இருக்கும். ஒருவருக்கு ஒரு பதவி, 5 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் பதவியில் இருக்கக்கூடாது, 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 50% பேர் கட்சி பதவிகளில் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மைனாரிட்டி பிரிவுகளை சேர்ந்தவர்கள் 50% கட்சி பதவிகளில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்படும் பொழுது கடைபிடிக்கப்படும்" என்றார்.



from India News https://ift.tt/i8WovhR

Post a Comment

0 Comments