உலக பழங்குடியின தினத்தை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய சினிமா விருது அறிவிக்கப்பட்ட பழங்குடியின பாடகி நஞ்சியம்மாளுக்கு முதல்வர் பினராயி விஜயன் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நஞ்சியம்மா, "எனது மனமும், கண்களும் நிறைந்தன. நம் முதல்வருக்கும், மக்களுக்கும் நன்றி. இது மக்கள் எனக்கு அளித்த விருது. நான் கஷ்டப்பட்டு வாங்கியது அல்ல. எனது பாட்டை இனியும் நான் உங்களுக்குத் தருவேன். இன்னும் எங்கள் மக்கள் வெளியே தெரியாமல் உள்ளே இருக்கிறார்கள். அவர்களை அரசு வெளியே கொண்டுவர வேண்டும்.
என் பாட்டு பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள் என இயக்குநர் சச்சி சாரிடம் சொன்னேன். எனக்கு பேசவும், பாடவும் நிறைய இருக்கிறது. பல நிகழ்ச்சிகளுக்குச் சென்றதால் என் குரல் போய்விட்டது. என்னை மன்னித்துவிடுங்கள்" என்றவர் ’களக்காத்தா சந்தணமேரா...’ பாடலை மேடையில் பாடினார். மேடையில் இருந்த வி.ஐ.பிகளும் அங்கு கூடியிருந்தவர்களும் தாளம்போட்டு பாடலை ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், "உலகத்தில் உள்ள 48 கோடி பழங்குடியின மக்களின் பாரம்பர்யத்தையும், சரித்திர வரலாற்றையும் வரும் தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே உலகம் இந்த முறை பழங்குடியின தினத்தை கொண்டாடுகிறது. பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவை நாம் பாராட்டியுள்ளோம். ஒவ்வொரு மக்களுக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கான இசையும், பாடலும் உண்டு. கேரள பழங்குடியின மக்களின் பாரம்பர்ய பாடலை உலகின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் நஞ்சியம்மா. பழங்குடியின இசையை நமக்கு அறிமுகம் செய்த அவரை பாராட்டுகிறோம்.
சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடக்கும் சமயத்தில், இந்திய அரசியலமைப்பு முன்வைக்கும் சமூக, பொருளாதார சமத்துவத்துவத்தை ஏற்படுத்த எவ்வளவு முடிந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சுதந்திர இந்தியாவில் பழங்குடியின மக்களின் வாழ்க்கை எவ்வளவு முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பதை மனதில் வைத்து ஆய்வு செய்ய வேண்டும். தரமான கல்வி, உயர்ந்த ஆரோக்கியம் என்ற வாசகத்தை கேரளா முன்வைக்கிறது. இந்த இரண்டு விஷயங்களில இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட கேரளா மிகவும் முன்னிலையில் உள்ளது. அதில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் பல செயல்பாடுகளும் உள்ளன.
பழங்குடியின மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுள்ள நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. நம் நாட்டின் சரித்திரத்தைப் போன்று பழங்குடியின மக்களும், மக்களின் கலாசாரமும், பண்பாடும் பழமையானவை. நாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த சமயத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுகளை நிலைநிறுத்தும் விதமாக வயநாடு சுகந்தகிரியில் 20 ஏக்கரில் ஒரு டிரைபல் மியூசியம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/crImpVH
0 Comments