அண்மையில் கேரளாவில்சி.பி.எம் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ``இரு மாநில உரிமைகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்போம்” எனப் பேசியிருக்கிறார். வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் இவ்விருமாநிலங்களின் தலைமையும் இணக்கமாக இருந்து வருவதால், இந்தச் சந்திப்பில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் இரு மாநில முதல்வர்களின் சந்திப்பில் இவ்விவகாரம் குறித்த அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்புக் கிளம்பியது. ஆனால், இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
சமீப காலமாக கேரளா, தமிழ்நாடு முதல்வர்கள் பல்வேறு பிரச்னைகளில் இணைந்து செயல்படுகிறார்கள். ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் இணைந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசனிடம் பேசினோம். “கேரளா, தமிழ்நாடு முதல்வர்களுக்கு இடையேயான அரசியல் கூட்டணி, தமிழகத்துக்கு நியாயம் வழங்கும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் உருவாக்காது. முல்லைப் பெரியாறு விவகாரங்களில், ஆளும் கட்சியாக எதிர்த் தரப்பில் இருப்பது காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டோ, அவர்கள் அணையை இடிக்க வேண்டும் என்பதில்தான் உறுதியாக இருப்பார்களே ஒழிய, எந்த வகையிலும் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்யமாட்டார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரண்டும் ஒரேமாதிரிதான் சிந்திக்கும். இருவருமே தமிழ் நாட்டின் உரிமைப்பறிப்பில் உறுதியாக இருப்பவர்கள்தான். ‘அணையை இடிக்கவேண்டும், அணை ஆய்வுக்குழுவைக் கலைக்க வேண்டும்’ என்பதே விஜயன் அரசின் தொடர் நிலைப்பாடாக இருந்துவரும் சூழலில், அவரிடமிருந்து தமிழ்நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எதிர்பார்க்க முடியாது.
கேரள அரசு கட்டாயமாக அணை வலுவாக இல்லை என்ற கருத்தை முன்வைத்து, அதை இடிக்கவே போராடுவார்கள்” என்று கூறிய மணியரசன், “தமிழக அரசு அவர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது” என்றும் கூறினார்.
மணியரசன் முன்வைத்த கருத்துக்கள் குறித்தும், இரு மாநில முதல்வர்களின் சந்திப்பு குறித்தும் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``முல்லைப் பெரியாறு விவகாரம் என்பது பிராந்திய உணர்வு சார்ந்தது. இரு மாநிலத்தின் மக்களும் உணர்வுப்பூர்வமாக இவ்விவகாரத்தில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இது முதல்வர்கள் பேசித் தீர்வு காணும் விஷயம் அல்ல. பினராயி விஜயன் அரசு தமிழக அரசுக்கு ஆதரவாக அறிவிப்பு விடுத்தால், தங்கள் மாநிலத்தில் பல விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். ஆக அவர்களிடம் அதை எதிர்பார்ப்பதே கடினம்தான். இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பாக நீதிமன்றம் தலையிட்டுத் தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இந்தப் பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படும். ஆனாலும் கண்டிப்பாக அணை மீது கைவைக்கத் தி.மு.க அரசு விடாது என்ற உத்தரவாதத்தை மட்டும் என்னால் தர முடியும்.
அணையைத் தக்கவைப்போம். கண்டிப்பாக இடிக்க விடமாட்டோம். ஆட்சியே கவிழும் சூழல் ஏற்பட்டாலும் சரி, அணையைக் கைவிடமாட்டோம்” என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ajvptqY
0 Comments