மத்திய பிரதேசத்தின் பால்பூர் கிராமத்தில் திருவிழாவின்போது இளைஞர்கள் பலர் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தின் பால்பூர் கிராமத்தில் பழங்குடியின மக்களின் பிரசித்திப் பெற்ற பகோரியா திருவிழா, கடந்த மார்ச் 11-ம் தேதியன்று நடைபெற்றது. இந்த திருவிழாவானது அறுவடை மற்றும் நன்றி தெரிவிக்கும் பெருவிழாவாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
திருவிழாக் கொண்டாட்டங்களின்போது, பால்பூர் கடை வீதியில் பழங்குடி இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். திருவிழா என்பதால் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்ட வீதியில், இளைஞர்கள் திரளாக அந்தப் பெண்ணை பின் தொடர்ந்துள்ளது வீடியோ காட்சிகளின் மூலம் தெரிய வருகிறது.
உடனே அந்த இளைஞர்களில் சிலர், தனியாகச் சென்ற அந்த இளம்பெண்ணை வழிமறித்துப் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இளைஞர்கள் தொடர்ச்சியாக, பல நிமிடங்கள் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த நிலையில், இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை இளைஞர்கள் கூட்டத்துக்குள் தள்ள, கூட்டத்தில் உள்ள அனைவரும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அந்த இளைஞர்களில் பலரும், திருவிழா கூட்டத்தின் பெரும் பகுதியினரும் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். அப்போது, ஒருவர் கூட அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை, நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்கவில்லை என்பது அவலம். இந்தக் காட்சிகள் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, பின் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள Free Press Journal செய்தி நிறுவனம், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்கள் அதே கிராமத்தைச் சார்ந்தவர்கள் எனவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரடண்டென்டன்ட் மனோஜ் சிங் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம், மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கான பாதுகாப்பின் அளவீட்டை கேள்விக்குறியாக்கி உள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/5XEocR2
0 Comments