தவெக நிர்வாகி கொலை: `ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி!' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க-வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க-வில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் செப்.5-ம் தேதி இரவு 9 மணி அளவில் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், அடையாறு துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

நயினார் நாகேந்திரன்

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி! நேற்றிரவு சென்னை அடையாறு அருகே, தவெக நிர்வாகியான கண்ணன் என்பவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காணொளி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரின் பொதுவெளியிலேயே இப்படி ஒரு கொடூரம் நடக்கிறது என்றால், தமிழகத்தின் மற்ற interior கிராமங்களில் சட்டம் ஒழுங்கின் நிலை எப்படியிருக்கும் என நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் முழுதாக முடிந்த பிறகும் கூட, மக்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், சட்டம் ஒழுங்கில் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தாமல், திங்கள் முதல் வெள்ளி வரை "9 to 5" என்ற கோட்பாட்டின் கீழ் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் திரு. ஜோசப் விஜய் அவர்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதனால் தான் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 200- க்கும் அதிகமான பாலியல் குற்றங்களும், கிட்டதட்ட 200 கொலைக் குற்றங்களும், ஆயிரக்கணக்கான போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன. எனவே, சினிமாவைப் போல, சட்டமன்றத்தில் வசனம் பேசிக் கொண்டிருக்கும் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தான் தமிழகத்தின் முதல்வர் என்பதை முதலில் உணர வேண்டும். கையை அசைப்பது போலவும், பாட்டிக்கு கண்ணாடி கொடுப்பது போலவும் ரீல்ஸ்களை எடுப்பதில் காட்டும் ஆர்வத்தையும் கவனத்தையும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் மீதும் கொஞ்சம் செலுத்த வேண்டும்." என்றார்.



from India News https://ift.tt/FB58u7P

Post a Comment

0 Comments