கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன்; தண்டனை குறைப்பு செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தனது 7 மாத கர்ப்பிணி மனைவியை கல்லால் தாக்கி படுகொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சின்வாரா நீதிமன்றம் சிவாவிற்கு ஆயுள் தண்டனை விதித்தது. இத்தண்டனையை எதிர்த்து சிவா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் அகர்வால் மற்றும் அவனிந்திர குமார் சிங் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பு அரசு வழக்கறிஞர் அளித்த தகவலில், 'சம்பவத்திற்குப் பிறகு சிவாவே நேரடியாக மனைவி கிரணின் உறவினர்களைத் தொடர்புகொண்டு, தான் தன் மனைவியைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

அதற்கான காரணத்தைக் கேட்டபோது, கிரண் அவரிடம், 'உன்னைப் போன்ற ஆயிரம் கணவர்களை என்னால் வைத்திருக்க முடியும்' என்று கூறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர், அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து மனைவியைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவரே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட கிரண் உயிரிழக்கும்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி அவரது முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன' என்று அரசு வழக்கறிஞர் குற்ப்பிட்டார்.

இவ்வழக்கில் உயர் நீதிமன்றம், கிரணின் மரணத்திற்கு சிவாவே பொறுப்பு என்பதை உறுதி செய்த அதே வேளையில், அந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கம் இருந்திருந்தால், தான் செய்த செயலைப் பற்றி போலீஸாருக்கும், பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கும் அவரே முதன்முதலில் தகவல் தெரிவித்திருக்க மாட்டார் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் திடீரென நிகழ்ந்தது என்றும், முன்கூட்டியே திட்டமிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கல் சம்பவ இடத்திலேயே கிடந்தது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், அந்தப் பெண் மீது தொடர்ச்சியாகப் பலமுறை கல்லைக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதை ஆதாரங்கள் நிரூபிக்கவில்லை என்று குறிப்பிட்டது.

தடயவியல் ஆய்விற்காக ஒரே ஒரு கல் மட்டுமே கைப்பற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்த சில காயங்கள் இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த பாறைகள் மீது விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினர்.

மேலும், ஒரு மனைவி தன் கணவனைப் பார்த்து, "உன்னைப் போன்ற ஆயிரம் கணவர்களை என்னால் வைத்திருக்க முடியும்" என்று கூறும்போது, அது அந்தக் கணவன் எதற்கும் லாயக்கற்றவன் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதற்குச் சமம் என்று கூறியது.

நீதிபதிகள் தங்களது இறுதித் தீர்ப்பில், சிவாவின் இந்தச் செயல் கிரணின் மரணத்திற்கு வழிவகுத்த போதிலும், இந்த வழக்கு ஐபிசி பிரிவு 304 பாகம் I-ன் கீழ் வராது என்றும், அதற்கு மாறாகக் குறைவான தண்டனைக்குரிய பிரிவு 304 பாகம் II-ன் கீழ்தான் வரும் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி, சிவாவின் தண்டனையை ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையாகக் குறைத்ததோடு, ₹1,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தனர்.

இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி, ஒரு சூடான விவாதத்தின் போது கூறப்படும் மிகக் கடுமையான வாய்மொழி ஏளனப் பேச்சுகள், ஒரு சாதாரண மனிதனின் சுயக்கட்டுப்பாட்டை முற்றிலும் இழக்கச் செய்யும் அளவுக்கு இருந்தால், அது சட்டப்பூர்வமாகக் கடுமையான மற்றும் எதிர்பாராத தூண்டுதலாகக் கருதப்படலாம்.



from India News https://ift.tt/stqWr8c

Post a Comment

0 Comments