இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன்; காரணம் என்ன?

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு எம்எல்ஏ-வுமான கே.பி.அன்பழகன்.

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி
எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி

அதிமுக-விலிருந்து முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ-க்கள், முக்கிய நிர்வாகிகள் தவெக-வுக்குத் தாவி வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக நடத்தும் நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை அதிமுக தலைமையகத்தில் நடந்த தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ-மான கே.பி.அன்பழகன் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்

இதுகுறித்து தருமபுரி மாவட்ட அதிமுக-வினரிடம் விசாரித்தபோது, "ஆறாவது முறையாக பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்டச் செயலாளராக நீண்டகாலமாக இருந்து வந்தார்.

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப்பின் வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்களும், முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதோடு தவெக அரசை ஆதரித்தும் வருகிறார்கள்.

வேலுமணி அணியில் சேர்ந்ததால், கே.பி.அன்பழகனின் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அதோடு தருமபுரியை அமைப்பு ரீதியாக இரண்டு மாவட்டமாகப் பிரித்து, டாக்டர் அசோகன், டி.ஆர்.அன்பழகன் ஆகியோரை மாவட்டச் செயலாளர்களாக நியமித்தார்.

இந்த நிலையில் வேலுமணி அணியினர் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியான நிலையில் கே.பி.அன்பழகனுக்கு அமைப்புச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன்
சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன்

தனக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அன்பழகனுக்கு அதிகாரம் இல்லாத அமைப்புச்செயலாளர் பதவி வழங்கியது பிடிக்கவில்லை. மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் கேட்டார்.

தன்னை எதிர்த்து வேலுமணியுடன் சென்ற இவருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கினால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட இரண்டு மாவட்டச் செயலாளர்களும் அதிருப்தி அடைவார்கள் என்பதால் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இதனால் அப்செட்டாகி இருந்த நிலையில்தான் நேற்று நடந்த தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அன்பழகன் புறக்கணித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தவெக-வில் இணையும்படி டாக்டர் விஜயபாஸ்கர் தரப்பில் தொடர்ந்து பேசி வருவதாகச் சொல்லப்படும் நிலையில்தான் இந்தக் கூட்டத்தை அவர் புறக்கணித்தார் என்றும் சொல்லப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் இதற்கான விடை இரண்டொரு நாளில் தெரியும்'' என்கிறார்கள்.



from India News https://ift.tt/HLYhQ80

Post a Comment

0 Comments