`காட்டுமன்னார் கோவிலில் நான் போட்டியிடாதது குறித்து திமுகவிடம் கேள்வி எழுப்பியதுண்டா?'- திருமாவளவன்

மேலவளவு முருகேசன் மற்றும் 6 பேரின் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம், மேலூர் மேலவளவு கிராமத்தில் அமைந்துள்ள அவர்களது மணி மண்டபத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "மேலவளவு முருகேசனை ஊராட்சி மன்றத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாத மண்தான் இன்று மேலூர் பொதுத் தொகுதியில் ஒரு தலித் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளது.

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி கோரிக்கையை முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புகிறோம்" என்றார்.

பின்னர் மேடையில் பேசியவர், "சாதி பெருமை பேசுவதற்கு நாம் இங்கு ஒன்றும் கூடவில்லை, இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் சம்பிரதாய நிகழ்வு அல்ல இது. ஒரு வருடமாக என்ன சாதித்து இருக்கிறோம், எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்று மீளாய்வு செய்யும் களம் தான் இது.

நம்மை யாரும் பாராட்ட மாட்டார்கள், அவதூறுகளை பரப்புபவர்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர். வஞ்சமும் சூதும், சூழ்ச்சிகளும்  நிறைந்த களத்தில் புத்துணர்வை ஊட்டிக் கொள்ளும் களம் தான் இந்த மேலவளவு களம்.

இந்த தலைமையை நாங்கள் நம்புகிறோம் என்று என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு காலில் வணங்கி என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டவர்கள் இன்றும் அதே உணர்வோடு, நம்பிக்கையோடு கோத்துக்கொண்டே என்னுடன் வருகிறார்கள். என் மீது யாரும் அவதூறு பரப்பி வெளியேறவில்லை. இந்த இயக்கத்தில் எத்தனையோ பேர் வந்தர்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்

குறிப்பாக வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள் சிலர். அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கலாம், அந்த நோக்கம் நிறைவேறாத போது சில அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

அந்த அவதூறுகள் எல்லாம் எடுபடாது என மேலவளவு கிராமம் உணர்த்தியுள்ளது. சில அல்லு சில்லுகள் நாம் உயிரோடு இருக்கும் போதே மேலவளவு கிராமத்திற்கும் திருமாவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறார்கள். திரிபுவாதம் பேசும் கும்பலும் இங்கே இருக்கத்தான் செய்கிறது.

1997 ஆம் ஆண்டு மேலவளவு முருகேசன் படுகொலை செய்யப்பட்ட போது யாரும் வாய் திறக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இப்போது தான் தலித் அரசியல் விரிவாக பேசப்படுகிறது.

ஒரு தலித் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. திருமாவளவனையும் முதல்வராக்கலாம் என்று  பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைகீழாக மாறியுள்ளது. இது சிறுத்தைகளின் சாதனை, திருமாவளவனின் சாதனை. எல்லா துறையிலும் தலித் பற்றி பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

எந்தப் பின்புலமும் இல்லாமல் சாதி வெறியர்கள் ஒரு புறம், அதிகார வர்க்கம் ஒரு புறம், ஆட்சியாளர்கள் ஒரு புறம் ஒடுக்கு முறைகளை தாக்குப்பிடித்து நின்றுள்ளோம்.

எங்களை ஓரங்கட்ட நினைத்தாலும், ஒதுக்கி வைத்தாலும் நாங்கள் தான் மையம். இரண்டு சீட்டு என்று கிண்டல் செய்தார்கள். அந்த இரண்டு சீட்டின் அருமை இப்போது தெரிந்ததா? 3 சீட்டு கும்பல் என்று எங்களை கிண்டல் செய்தார்கள். தேர்தல் முன் தொங்கும் சட்டசபை உருவாகும் என்று சொன்னவன் நான்.

ஸ்டாலின், திருமாவளவன்

அரசியல் களம் மாறுகிறது... காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட உள்ளதாக நான் முன்பே சொன்னேன். திருமாவளவன் காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட விரும்பிய நிலையில், அவர் போட்டியிடவில்லை என்று சொன்னதற்கு ஏதாவது காரணம் உள்ளதா என திமுக தலைவரிடமோ? அல்லது மூத்த நிர்வாகிகளிடமோ கேள்வி எழுப்பியதுண்டா?

திமுகவில் 60 சிட்டிங் சட்டமன்ற உறுப்பினருக்கு சீட்டு தரவில்லை, ஆனால் நான் 3 பேருக்கு தான் தரவில்லை. நமக்கு கிடைக்கிறதே 6, 8 சீட்டு தான். அதில் இரண்டு பொது தொகுதி தான். எனவே சீட்டு கொடுத்தவர்களுக்கே மீண்டும் சீட்டு கொடுப்பதா? மாற்றி கொடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. தந்தவர்களுக்கே தந்தார் என வற்புறுத்தும் போது நான் துணிந்து ஒரு முடிவை தான் எடுக்க  முடியும்.

யாருக்கு சீட் வழங்க வேண்டும் என்ற சுதந்திரம் இருந்தால் தான் திட்டமிட முடியும். ஆனால் ஊடகங்கள் கட்சி உடைய போகிறது, புதிய கட்சி தொடங்கப் போவதாக எழுதுகிறார்கள்.

அதிமுகவில் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அதைப்பற்றி கருத்து சொன்னால் நான் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு " செக்" வைப்பதாக சொல்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் விலகல் குறித்து அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும் அல்லது தமிழக வெற்றிக் கழகத்திடம் கேட்க வேண்டும். முடிந்தால் முதல்வரிடம் கேட்க வேண்டும்.

சமூக நீதி அமைச்சராக வன்னியரசு
அமைச்சர் வன்னியரசு

சூது, வஞ்சகம் நிறைந்த அரசியல் களத்தில் நான் போராடிக் கொண்டு வருகிறேன். வன்னி அரசின் துறையை மாற்ற சொல்லி நான் அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வருகிறது. அப்படிப்பட்ட பேச்சே நடக்கவில்லை. அமைச்சர் வன்னி அரசு சிறப்பாக செயல்படுவதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேளச்சேரியில் முதல்வர் விஜய் என்னுடன் சந்தித்த போது இடைத்தேர்தலில் நிற்க விருப்பம் இல்லை, அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன் என நான் அப்போதே முடிவெடுத்து விட்டேன்.

இடைத்தேர்தலில் நிற்கும் ஒரு எண்ணமே எனக்கு இல்லை. தமிழ்நாட்டில் விசிக ஒரு சமூக அடையாளம் கொண்டு இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களுக்கான இயக்கம் என்ற ஒரு அங்கீகாரம் பெற்றுள்ளோம். இது அனைத்து தரப்பு மக்களுக்கான இயக்கம். அந்த அடிப்படையில் தான் என்னுடைய பிறந்த நாளில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடத்துகிறோம்.

தென்மாவட்டதில் எங்கள் இயக்கம் இல்லை என்று சொன்னார்கள், ஆனால் தென்மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. ஒரு போராளிக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது, இது தென்மாவட்ட சிறுத்தைகளுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.

திருமாவளவன்

தமிழக அரசியலில் யாராலும் சிந்தித்து பார்க்க முடியாத அளவில் துணிச்சலான முடிவு நிகழ்ந்துள்ளது. சாதி, மதம் தாண்டி செயல்பட முடியும் என்று 8 தலித்களுக்கு அமைச்சரவை பொறுப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் கூட்டணி ஆட்சி உண்மையான, நேர்மையான  அரசியல் பிரதிநிதித்துவம் மலர்ந்துள்ளது. இதை, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டிய கடமை முதல்வர் விஜய்க்கு உள்ளதோ, இல்லையோ, நமக்கு இருக்கிறது" என்றார்.



from India News https://ift.tt/RPqSgz8

Post a Comment

0 Comments