"கேரளா துபாயிலா இருக்கிறது?"கனிமவள லாரிகளை அனுமதிக்க கோரிய திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்   நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.  இதுகுறித்து ஆஸ்டின் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கும், சாலை பணிகளுக்கும் மூலப்பொருட்களான பாறை பொடி, ஜல்லி போன்றவை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து விதிகளுக்குட்பட்டு கொண்டு வரப்படுகின்றன. தற்போது கடந்த ஒரு சில மாதங்களாகவே நெல்லை - குமரி மாவட்டத்துக்கு இடையே சோதனை சாவடி அமைத்துள்ளனர். அந்த வழியாக கட்டுமான பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் 2 முதல் 4 நாட்கள் வரை லாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை உயர்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் தான் லாரிகளை சோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்யுங்கள் என்று தான் அப்போதைய அமைச்சர் கூறியிருப்பார். ஆனால் தற்போது நடைமுறையில் வரும்போது லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. அதில் எனக்கு உடன்பாடில்லை. கண்டிப்பாக அது தவறு. அதிகபாரம் ஏற்றி வந்து விபத்தை ஏற்படுத்தும் லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை அல்ல. உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் லாரிகளை காலம் தாழ்த்தாமல் அனுமதிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறோம்" என்றார்.

கன்னியாகுமரி மாவட்டட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

பின்னர், அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழ்நாட்டில் ஒரே சட்டம்தான். கன்னியாகுமரிக்கு ஒருசட்டம், திருநெல்வேலிக்கு ஒரு சட்டம், தூத்துக்குடிக்கு ஒரு சட்டம், காஞ்சிபுரத்துக்கு ஒரு சட்டம் இல்லை. மக்கள் பாதிக்காதவகையில்தான் இருக்கவேண்டும். சும்மா தொழில் பண்ணுகிறவர்களின் தொழிலை கெடுப்பது, லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை எல்லாம் செய்யக்கூடாது. இங்கு இருக்கும் அதிகாரிகள் அதை சரியாக நடைமுறைப்படுத்தணும் என்பதற்காகத்தான் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஆஸ்டினுடன் நானும் வந்து மனு அளித்துள்ளேன்.

தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின், அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

எங்கள் பகுதியில் உள்ளவர்கள் எல்லாம் என்னிடம் குறைசொன்னார்கள். நாங்கள் வரும்போது இருநூறு இருநூற்றைம்பது லாரிகள் வரிசையாக நிற்பதை பார்க்கிறோம். ஏன் இப்படி நிற்கிறீர்கள் எனக்கேட்டதற்கு, 'நான்கு நாட்களாக இப்படி காத்திருக்கிறோம். எங்கள் தொழிலே அழிந்துபோகும்போல இருக்கிறது' என அவர்கள் அழுகிறார்கள். அதனால்தான் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தோம்" என்றவரிடம், "தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு கடந்த ஆட்சிகாலத்தில் இருந்தே இருக்கிறது. அதைத்தடுப்பதற்காகத்தான் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக சொல்லப்படுகிறதே?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "கேரளா இந்தியாவில் இருக்கிறதா, வெளிநாட்டில் இருக்கிறதா அல்லது துபாயில் இருக்கிறதா. அதனால் எல்லா பொருட்களும் அங்கேயும் போகும், இங்கேயும் போகும்" என்றார் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால், கேரளத்தில் இருந்து இங்கு கனிமவளங்கள் வருவதில்லையே என செய்தியாளர்கள் கேட்டதற்கு "அவர்கள் செய்யும் தவறை நாம் செய்யக்கூடாது" என்றவரிடம் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பற்றி கேட்டதற்கு, "சந்தோஷம். அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.



from India News https://ift.tt/u2oRzJX

Post a Comment

0 Comments