நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லுரி இயங்கி வருகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ராதா மோகன் சிங், எம்.பி திருமாவளவன் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராணுவ கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய எம்.பி திருமாவளவன், " அ.தி.மு.க-வில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைவது என்பது நாகரீகமான அரசியலாக இருக்க முடியாது. அது ஏற்புடையதும் அல்ல. இது போன்ற நடவடிக்கைகள் த.வெ.க- விற்கு நற்பெயரை ஈட்டி தராது.
அதற்கு மாறாக அவர்கள் மீதான நம்பகத்தன்மையை களங்கத்திற்கு உட்படுத்தும். அ.தி.மு.க - வில் உள்ள முன்னணி பொறுப்பாளர்கள் அந்தக் கட்சியில் நிலவுகிற குழப்பத்தின் காரணமாக இன்னொரு கட்சியில் சேர்வது என்பது வேறு.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க - வில் இணைவது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையாக கருத முடியாது . பொதுமக்களும் இதை நம்ப மாட்டார்கள். இது போன்ற நடவடிக்கைகளை த.வெ.க ஊக்கப்படுத்துமானால் அது அக்கட்சியின் நற்பெயர் மீது களங்கத்தை உண்டாக்கும். நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் முதலமைச்சரின் டெல்லி பயணம் வழக்கமான ஒன்றுதான். யார் முதலமைச்சராக பொறுப்பேற்றாலும் பிரதமரை சந்திப்பது அவசியமானது. தவிர்க்க முடியாதது. அதனை வரவேற்கிறோம்" என்றார்.
from India News https://ift.tt/ACUi8qB
0 Comments