முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்' என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது.
எந்தவித உண்மையும் இல்லை
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும். ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை. இது தர்மத்திற்கு எதிரானது. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மகளிர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்காக மட்டுமே செய்கிறார்கள்.
ஏனென்றால், சென்ற முறை பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் இல்லை, இப்பொழுது கொடுத்தால் மக்கள் மறந்து விடுவார்கள் அதனால் தேர்தல் ஆண்டு கொடுக்கலாம் என்று சொன்னவர்கள் தான் தி.மு.க அறிவாலயம்.
இவர்கள் அதைத்தான் இப்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இன்று ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள், ஏன் இந்த திட்டம் அறிவித்த பின்பு இரண்டு ஆண்டுகள் கொடுக்காமல் இருந்துவிட்டு பின்பு கொடுத்தார்கள்? இன்று தேர்தலுக்காக ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் ஆரம்பிப்பதற்கு முன்னால் உள்ள தொகையை சேர்த்து மக்களுக்கு கொடுக்கவில்லை? அதுவே மக்களை ஏமாற்றுவது தானே. அதுமட்டுமல்ல டாஸ்மாக் மூடுவதை பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உரிமைத் தொகையை உயர்த்திக் கொடுப்பதில் என்ன பலன்?
இங்கு அப்படி இல்லை
ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், குடிக்கும் பழக்கம் உள்ள நபரால் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் 6 ஆயிரம் ரூபாய்.. டாஸ்மாக்கிற்காக செலவழிக்கிறது என்கிறது. டாஸ்மாக் மூலமாக 45,000 கோடியை இந்த அரசாங்கம் சம்பாதிக்கிறது. ஆக குடும்பங்களை குலைத்துவிட்டு, குடும்பப் பெண்களுக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறது இந்த அரசு. எல்லோரும் பீகாரை உதாரணம் காண்பிக்கிறார்கள். ஆனால் பீகாரில் பெண்களுக்கு கொடுக்கும் பணம் அந்த குடும்பத்திற்கு மட்டுமே செலவழிக்கப்படும். ஏனென்றால், அங்கே பூரண மதுவிலக்கு இருக்கிறது. இங்கு அப்படி இல்லை.
அதுமட்டுமல்ல பெண்கள் எல்லோரும் தொழில் முனைவோராக வேண்டும், முதலாளிகளாக வேண்டும் என்பதற்காகத்தான் மரியாதைக்குரிய பிரதமர் மோடி முத்ரா திட்டத்தை கொண்டு வந்து, அதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர் பலனடைந்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல சாலையோர வியாபாரிகளில் குறிப்பாக பெண்களுக்கு, அவர்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கு உதவி கடன் உடனே கொடுக்கப்படுகிறது. ஆக இந்த தி.மு.க அரசு பெண்களுக்கான தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாமல், தொல்லை நோக்கு திட்டத்தை தான் வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் மகளிரும் தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் அறிவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்தால் வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களுக்கு இதைவிட சுய சார்பானவர்களாக அவர்களை மாற்றுவதற்கும், சுய கௌரவம் உள்ளவர்களாக அவர்களை மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது மட்டுமல்ல, ஏற்கனவே அண்ணன் எடப்பாடியார் அவர்கள் உரிமை தொகை 2000 ஆக உயர்த்தப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள் என்பதை என் சகோதரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல மரியாதைக்குரிய பாரத பிரதமர் கொண்டு வந்து டிஜிட்டல் இந்தியா மூலமாகத்தான் இவர்கள் நினைத்தாலும் விடியா அரசு விடிவதற்குள் உடனே பெண்களுக்கு போட முடிகிறது என்பதற்கும் பிரதமரை இவர்கள் பாராட்டியாக வேண்டும். முதல்வர் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார். பாராளுமன்ற தேர்தல் அப்பொழுது கூட இந்த திட்டம் முடக்கப்படவில்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பதிவிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/wRlzmKX
0 Comments